16 October 2006

33 : ஈழத் தமிழருக்கு என்ன போர் வெறியா???

இலங்கையில் இன்றய நிலமை தற்போது தமிழகத்தில் பெரும் குளப்பத்தை தூண்டி விட்டு இருக்கின்றது. இது உணர்வுகளுடன் தொடர்பு பட்ட விடயம் என்பதால் தமிழகக் கட்சிகள் யாவும் இதன் மூலம் குளிர்காய முயற்சிக்கின்றன. சிலர் ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் சிலர் தற்போது திடீர் என்று ஈழத்தமிழர் பால் அன்பு செலுத்துவது சந்தோஷத்திற்குப் பதிலாக வேதனையைத் தருகின்றது. காரணம் தற்போதய நிலமை சிறிது தணிந்ததும் அவர்கள் ஈழத் தமிழர்களை மீண்டும் மறந்து விடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வருகின்றது.

இந்தக் கட்டுரை தமிழகத் தமிழர்களுக்காகவே எழுதுகின்றேன். ஈழத் தமிழர்களின் பிரைச்சனை பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையை இக்கட்டுரை அவர்களுக்கு வழங்கும் என்று நம்புகின்றேன்.

ஈழப்பிரைச்சனையின் ஆணி வேர் 1948 ல் தொடங்குகின்றது. 1948 ல் இலங்கை பிருத்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இதன்போது இலங்கையில் இருந்த அப்போதய தமிழ் தலைவர்கள் தாம் சிங்களவருடன் இணைந்து வாழமுடியும் என்று நம்பிக்கை கொண்டு இருந்ததால் தமக்கு இணைந்த நாட்டையே வழங்குமாறு இங்கிலாந்து அரசிடம் கேட்டுக் கொண்டனர். அவ்வாறே இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

அன்று ஈழத் தமிழ் தலைவர்கள் அவ்வாறு கேட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. எ-கா. கொழும்பில் தமிழர்களே உயர் பதவிகளை வகித்தனர். நாடு முழுவதும் கிட்டத்தட்ட தமிழர்களே உயர் பதவிகளில் இருந்தனர். நாட்டின் உயர் கல்விப் பீடங்களில் தமிழ் மாணவர்களே மிக உச்ச அளவில் இருந்தனர். ஆகவே அவர்கள் நாட்டை பிரிக்கும் தேவை இருந்ததாக உணரவில்லை.

சிங்களவர் மனதில் சாதுவான நெருடல் பழைய காலம் முதலே இருந்து வந்தது. காரணம் தமிழர்களே அனைத்து துறையிலும் கோலோச்சுகின்றார்கள் என்று. ஆயினும் இதற்கான காரணம் பிருத்தானியரின் பாடசாலைகள் போன்ற கல்வீத்தாபனங்களை யாழ்ப்பாணத்திலே அமைத்தனர். இதன் காரணமாகவே தமிழர்கள் உயர் பதவிகளை அடையக் கூடியதாக இருந்தது.

ஆயினும் சுதந்திரத்தின் பின்னர் நிலமை தலைகீழாக மாறத் தொடங்கியது அதன் முதல் படிதான் தனிச் சிங்களச் சட்டம். இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறை வேற்றிய புண்ணியவான் முன்நாள் இலங்கைப் பிரதமரும் சந்திரிக்காவின் தந்தையுமாகிய எஸ்.டபிள்யு.பண்டாரநாயக அவர்கள். 1958 ல் இவர் இந்த சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்தவர். அங்கு அவரிற்கு வரவேண்டிய பதவி வராமல் விடவே விரக்தியில் சில இடது சாரிக்கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு சுதந்திரக்கட்சியை அமைத்தார்.

இலகுவாக ஆட்சியைப்பிடிக்க அவரிற்குத் தெரிந்த ஒரே வழி சிங்களவரின் உணர்வுகளைத் தட்டிவிடுவதே. அதனால் தனது தேர்தல் விஞ்ஞாபத்தில தான் ஆட்சிக்கு வந்தால் 48 மணி நேரத்தில் சிங்களத்தை தனி ஆட்சி மொழிஆக்குவேன் என்று உறுதி அளித்தார். ஏற்கனவே தமிழர் மீது சாதுவான பொறாமை கொண்டிருந்த சிங்களவர் தம் வாக்குகளை பண்டாரநாயக்கவிற்கு வழங்கி ஒரு பெரும் வரலாற்றுத் தவறை நிகழ்த்தினர். இத்தனையும் செய்த பண்டார நாயகாவை ஒரு பெளத்த பிக்கு துப்பாக்கியால் சுட்டமையையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பண்டாரநாயக்காவும் அதை அவ்வாறே நிறைவேற்றிக்காட்டினார். அன்று முதல் இன்று வரை தமிழர்கள் இலங்கை நடுவண் அரசினால் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். இதை எதிர்த்து தமிழ்கட்சிகள் காலி முகத்திடலில் பெரும் சத்தியாகிரகத்தை ஏற்பாடு செய்தனர். காத்தியத்தை பின்பற்றி போராடியவர்களை அன்று இலங்கை அரசு குண்டர்களைக் கொண்டு அடக்கியது. சத்தியாக்கிரகம் செய்தவர்களை பொலீசாரின் பாதுகாப்புடன் குண்டர் குழுக்கள் தாக்கினர். இவ்வாறு பல தடவைகள் தமிழரின் அஹிம்சா போராட்டம் மோசமாக நசுக்கப்பட்டது.

1960 ல் பண்டாரநாயக்காவின் துணைவியார் ஸ்ரீமாவோ பண்டாரநாயக அவர்கள் ஆட்சிப்பீடம் ஏறிநாலும் அவரும் கணவரின் பாதையைப் பின்தொடர்ந்தார். இவரின் காலத்தில் சிங்கள மொழிச்சட்டம் கடுமையாக்கப் பட்டதுடன் அரச சேவையில் இருந்து பல தமிழர்கள் சிங்களம் தெரியாத காரணத்தால் வெளியேற்றப்பட்டனர்.

1965 ல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டது. அத்துடன் தமிழிற்கு சட்டத்தில் ஒரளவு அங்கீகாரம் வழங்கப்பட்டது. பின்பு 1970 களில் தமிழிற்கு அந்தஸ்து வழங்கப்பட்டதையும் ஐ.தே.க திறந்த பொருளாதாரக் கொள்கையையும் எதிர்த்து பிரச்சாரம் செய்த சுதந்திரக்கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக்கொண்டது.

1971 ஏப்ரலில்தான் இன்றய இனவாதக் கட்சியான JVP உருவானது. இது வொரு தீவிரவாதக் குழுவாக ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் எந்த அடிப்படைக் கொள்கைகளும் இல்லாத இவர்கள் அன்றய அரசினால் நசுக்கி ஒடுக்கப்பட்டனர்.

1972 ஸ்ரீமா பண்டாரநாயக தலமையிலான அரசு புதிய அரசியல் சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் சிலோன் என அறியப்பட்ட நாடு ஸ்ரீ லங்கா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதில் காணப்பட்ட சரத்துகளால் தமிழினதும் சிறுபாண்மை மக்களான முஸ்லீம்களினதும் உரிமைகள் பறிக்கப்பட்டன. அதாவது பெளத்த மதம் நாட்டின் முதன்மை மதம் என்றும் இலங்கை பெளத்த நாடு என்றும் அது கூறியது. இக்காலப் பகுதியிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் அமைப்பு ஈழத்தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

1977 ல் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக வந்ததுடன் ஜயவர்த்தனா பிரதமராகத் தெரிவுசெய்யப்பட்டார் (ஐ.தே.க). பாராளுமன்றத்தில் தமிழீழ மாநிலத்தை வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒரு தமிழ் கட்சி பாராளுமன்றத்தில் இரண்டாவது அதிக ஆசனங்களைப் பெறுவதைப் பொறுக்க முடியாது ஜயவர்த்தனா 1978 ல் புதிய அரசியல் யாப்பு திருத்தத்தை மேற்கொண்டார். இப்புதிய யாப்பு மூலம் அரச அதிபர் நாட்டின் அதியுயர் சக்தி பீடமாகவும் மாற்றப்பட்டது.

இவ்வேளையில் ஒரு சட்டத்தின் மூலம் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் தமிழ் மாணவர்கள் ஒரம் கட்டப்பட்டு. குறைந்த வெட்டுப்புள்ளியுடன் சிங்களமாணவர்கள் தெரிவாக வழிசமைத்தனர். தமிழரின் சொத்தாம் கல்வியும் கடைசியாகப் பறிக்கப்பட்டது. இது இள இரத்தங்களை தூண்டி விட்ட முழு முதற் காரணி.

1982 காலப்பகுதியில் இளைய இரத்தங்கள் மெல்ல மெல்ல வன்முறை நோக்கித் திரும்பத் தொடங்கியது. இக்காலத்திலே புலிகள் உட்பட பல கொரில்லா குழுக்கள் தோற்றம் பெறத் தொடங்கின. இவர்களிற்கு ஆதரவு தமிழகத்திலிருந்து இந்திய அரசின் ஆதரவுடன் கிடைத்தது. தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் புலிகள் தம்மை தனி முத்திரையிட்டு மற்றவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டியதும் இக்காலப்பகுதிதான்.

இதற்குப் பின்னர் பல தடவைகள் ஈழத்தமிழர் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அதன் உச்சக்கட்டம்தான் 1983 கலவரம். இதன் பின்னரே உதவி கோரி தமிழகம் செல் ஈழத்தமிழர்கள் தலைப்பட்டனர். இதன் போது சிங்களக் காடையர் தமிழர்களின் இருப்பை இலங்கையில் கேள்விக் குறியாக்கினர். தலைநகரத்தில் தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொலை செய்யப்பட்டனர். இவை அனைத்தையும் இலங்கை அரசு சும்மா கையைக் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது.

இதன் பின்னர் நடந்தவை யெல்லாம் நீங்கள் அறிந்தவையே! அவையெல்லாம் ஈழத்தமிழரிற்கும் இந்தியாவிற்கும கசப்பான நிகழ்வுகள். தனியே புலிகள் மட்டும் குற்றம் செய்தவர்கள் என்று கூறி முடிப்பதற்கில்லை. பாரத மாதாவின் படைகள் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் செய்தது என்ன என்பதையும் ஒப்பு நோக்குதல் வேண்டும்.

இனிமேல் சிங்களக் காடையர் தமிழர் மீது கைவைக்க மாட்டார். காரணம் நான் சொல்லத் தேவையில்லை. வெட்டுக்கு வெட்டு என்னும் நம்மவர் கொள்கை இனி இலங்கையில் ஒரு இனக்கலவரம் உருவாவதற்கான கள நிலமையை அகற்றிவிட்டது. ஆயினும் சிங்களப்படைகளை அது அவ்வளவு இலகுவாகக் கட்டுப்படுத்திவிடாது. அது சிங்களக் காடயரை மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது.

நான் இங்கு கோடிட்டு காட்டியது சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இது போல பல நிகழ்வுகள் இங்கு நடந்தேறிவிட்டன. இனியாவது புதிய யுகம் இந்த மக்களிற்குப் பிறக்குமா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

18 மறுமொழி:

Anonymous said...

மயூரேசன், எளிய நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு.

//இவ்வேளையில் ஒரு சட்டத்தின் மூலம் இலங்கைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் தமிழ் மாணவர்கள் ஒரம் கட்டப்பட்டு. குறைந்த வெட்டுப்புள்ளியுடன் சிங்களமாணவர்கள் தெரிவாக வழிசமைத்தனர்.//
இது நடந்தது 1973களில். இதுவே மாணவர் எழுச்சிக்கு வழிவகுத்தது.

புதுமை விரும்பி said...

மயூரன் பதிவுக்கு மிக நன்றி.

//இனிமேல் சிங்களக் காடையர் தமிழர் மீது கைவைக்க மாட்டார். காரணம் நான் சொல்லத் தேவையில்லை. வெட்டுக்கு வெட்டு என்னும் நம்மவர் கொள்கை இனி இலங்கையில் ஒரு இனக்கலவரம் உருவாவதற்கான கள நிலமையை அகற்றிவிட்டது. ஆயினும் சிங்களப்படைகளை அது அவ்வளவு இலகுவாகக் கட்டுப்படுத்திவிடாது. அது சிங்களக் காடயரை மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது.//

விடுதலைப் புலிகளின் இரானுவ வலிமையைப் பொறுத்தே சிங்கள அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வரும் என்பதால், விடுதலைப் புலிகள் தங்களை இன்னும் சக்தியுடையவர்களாய் மாற்றிக்கொள்வது மிக அவசியமாகிறது. அதற்கு, விடுதலைப்புலிகள் என்ன செய்கிறார்கள்/செய்வார்கள் என்பது புரியவில்லை.

Anonymous said...

you need to do a medical check up ASAP

Anonymous said...

You need to do a medical check up ASAP

Jay said...

//மயூரேசன், எளிய நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு//

நன்றி திரு.கலாநிதி அவர்களே!
மேலதிகத் தவலிற்கும் நன்றி.

Jay said...

//விடுதலைப் புலிகளின் இரானுவ வலிமையைப் பொறுத்தே சிங்கள அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வரும் என்பதால், விடுதலைப் புலிகள் தங்களை இன்னும் சக்தியுடையவர்களாய் மாற்றிக்கொள்வது மிக அவசியமாகிறது. அதற்கு, விடுதலைப்புலிகள் என்ன செய்கிறார்கள்/செய்வார்கள் என்பது புரியவில்லை//

அவர்களின் தொலைநோக்கு எங்களின் சிந்தனாசக்திக்கு அப்பாற்பட்டது.. நிச்சயம் ஏதாவது செய்வார்கள்.

Jay said...

//You need to do a medical check up ASAP//
யாரோஉடைய வெப்தளத்தை உங்கள் தளம் என்று காட்டியுள்ளீர்களே!!
நான் தேவையென்றால் என்ன செக்கப்பும் செய்யத்தயார்.

CAPitalZ said...

மிக சுருக்கமாக முக்கியமான சம்பவங்களை எடுத்துக்கூறியமைக்கு நன்றிகள். இதைப் படித்தாவது நம் இந்திய நண்பர்கள் புரிந்து கொள்வார்களா என்று பார்ப்போம்.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/

Anonymous said...

Thanks my friend. Simple and Easy to read article. Good job.
-KVD

God said...

அன்பு மயூரேசன்...
இலங்கை சகோதரர்கள் மீது எனக்கு எப்போதுமே அனுதாபம் உண்டு. ஆனாலும் பலமுறை இந்த அடக்குமுறை மற்றும் இனக்கலவரங்கள் ஏன் என்கிற காரணம் புரியாமல் குழம்பியதுண்டு.
இவை அனைத்துமே மலிவான, மட்டரகமான அரசியல் சுயலாபத்திற்காகத்தான் என அறியும்போது, எம் கோடானு கோடி தமிழ் சகோதரர்களை நினைத்து நெஞ்சம் வெம்புகிறது.

- லெ. ராமசாமி
சென்னை. தமிழ்நாடு.

Jay said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Jay said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கபிடல் உங்கள் தனிமடல் கருத்துக்களையும் நான் கருத்தில் கொண்டுள்ளேன்.
நன்றிகள் !!!

பெத்தராயுடு said...

நீங்கள் தற்பொழுது கொழும்பில் படிக்கிறீர்களல்லவா?

சில கேள்விகள்.

1. இன்றைய இளைய தலைமுறை சிங்களவர்களின் அரசியல் கண்ணோட்டம் எவ்வாறு உள்ளது?

2. அவர்கள் இலங்கை அரசின் செயல்பாடுகளை ஆதரிக்கிறார்களா?

3. இப்பொழுதும் தெற்கில் தமிழர்கள் பாதுகாப்பின்மையை உணருகிறார்களா?

4. SLFP/UNP கட்சிகள் தங்களின் பழைய கொள்கைகளைப் பிடித்துகொண்டு இருக்கிறார்களா?

BadNewsIndia said...

நல்ல பதிவு.
செய்தி தொகுப்புக்கு நன்றி!

Jay said...

1. இன்றைய இளைய தலைமுறை சிங்களவர்களின் அரசியல் கண்ணோட்டம் எவ்வாறு உள்ளது?
மாற்றம் இல்லை...
இவர்கள் பார்வையில் நாங்கள் நண்பர்கள் ஆனால் நண்பர்களுடன் உரிமையைப் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்கள். பெரும்பாண்மை இனமே நாட்டின் தலைவிதியைத் தீர்மாணிக்க வேண்டும் எனும் கொள்கை உடையவர்கள்.


2. அவர்கள் இலங்கை அரசின் செயல்பாடுகளை ஆதரிக்கிறார்களா?
இலங்கையின் தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழங்களில் இனவாதக் கட்சியான ஜெ.வி.பி யே கோலோச்சுகின்றது...
இவர்கள் தமிழர்களின் தாயகப் பிரதேசத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். தாமே இலங்கை முழுவதும் இருந்ததாகவும் சோழர் காலத்தில் வந்த குடியேறிகள் ஈழத்தமிழர்கள் என்பதிலும் உறுதியாக இருக்கின்றார்கள்.

3. இப்பொழுதும் தெற்கில் தமிழர்கள் பாதுகாப்பின்மையை உணருகிறார்களா?
முன்பு இருந்த நிலைமையுடன் ஓப்பிடும் போது சிங்களக் காடையர் தாக்குவதற்கான நிகழ்தகவு குறைவு.. இதற்கான காரணங்களை நான் கூறி யுள்ளேன்.. இதைவிட இது இலங்கை அரசிற்கு மிகவும் கேவலமான பெயரைக் கொடுக்கும் என்பதால் அரசும் இவ் விடயத்தில் கவனமாக உள்ளது.


4. SLFP/UNP கட்சிகள் தங்களின் பழைய கொள்கைகளைப் பிடித்துகொண்டு இருக்கிறார்களா?
SLFPஆட்சிக்கு வந்ததே பழைய புளித்துப் போன விடையங்களைச் சொல்லித்தான்... ஆயினும் UNP சில முற்போக்குச் சிந்தனைகள் தெரிந்தாலும் எந்தளவிற்கு நம்பலாம் என்று சொல்வதற்கில்லை

பிரதீப் said...

மயூரேசா,
அருமையான பதிவு.
எளிமையான நடையில் நடந்ததை அப்படியே எந்த விதச் சார்பும் எடுக்காமல் விளக்கியது மிக நன்று.

உலகம் முழுமையும் இருக்கும் தமிழர் வாழ்வில் வெகு சீக்கிரம் விடிவெள்ளி பிறக்கும். கவலை வேண்டாம்.

ஈழபாரதி said...

//இனிமேல் சிங்களக் காடையர் தமிழர் மீது கைவைக்க மாட்டார். காரணம் நான் சொல்லத் தேவையில்லை. வெட்டுக்கு வெட்டு என்னும் நம்மவர் கொள்கை இனி இலங்கையில் ஒரு இனக்கலவரம் உருவாவதற்கான கள நிலமையை அகற்றிவிட்டது. ஆயினும் சிங்களப்படைகளை அது அவ்வளவு இலகுவாகக் கட்டுப்படுத்திவிடாது. அது சிங்களக் காடயரை மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளது.//

விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமையைப் பொறுத்தே சிங்கள அரசு பேச்சு வார்தைக்கு முன்வரும் என்பதால், விடுதலைப் புலிகள் தங்களை இன்னும் சக்தியுடையவர்களாய் மாற்றிக்கொள்வது மிக அவசியமாகிறது. அதற்கு, விடுதலைப்புலிகள் என்ன செய்கிறார்கள்/செய்வார்கள் என்பது புரியவில்லை.

இன்னொருமுறை இனக்கலவரம் வராமைக்கு காரணம்.
"அவலத்தை தந்தவருக்கே அவ் அவலத்தை திருப்பிக்கொடுக்கும் முறையினால்."
இதை "முள்ளை முள்ளால் எடுத்தல்" என்றும் கூறலாம்.
விடுதலைப்புலிகள் பலம்பெற நாம் செய்ய வேண்டியது புலம்பெயர் தமிழர் மட்டுமல்ல அனைத்து உலகத்தமிழர்களும் அவர்களை பலப்படுத்தல் முறையால்தான், பொருளாதாரமுறையில் பலப்படுத்தமுடியாதவர்கள், அரசியல் ரீதியாக அவர்களை பலப்படுத்த முன்வரவேண்டும். அது ஒன்றுதான் ஈழத்தமிழரின் அவலம் நீங்க ஒரே வழி. விடுதலப்புலிகளால்தான் மட்டும் இதற்கான ஒரு விடிவினை பெறமுடியும் என்பதை நம்புவதோடு மட்டும் நின்று விடாது. உலகத்துக்கும் ஏனையயோர்க்கும், உரத்து உறைக்க கூறமுன்வரவேண்டும்.

Jay said...

//அன்பு மயூரேசன்...
இலங்கை சகோதரர்கள் மீது எனக்கு எப்போதுமே அனுதாபம் உண்டு. ஆனாலும் பலமுறை இந்த அடக்குமுறை மற்றும் இனக்கலவரங்கள் ஏன் என்கிற காரணம் புரியாமல் குழம்பியதுண்டு.
இவை அனைத்துமே மலிவான, மட்டரகமான அரசியல் சுயலாபத்திற்காகத்தான் என அறியும்போது, எம் கோடானு கோடி தமிழ் சகோதரர்களை நினைத்து நெஞ்சம் வெம்புகிறது//
நன்றி அன்பரே உங்களைப் போன்றவர்களின் உறவுதான் எங்களை இன்றும் நம்பிக்ககையுடன் தமிழகத்தைப் பார்க்க வைக்கின்றது.