Showing posts with label சிறுவர். Show all posts
Showing posts with label சிறுவர். Show all posts

9 April 2007

70 : ஹரி பொட்டர் அன் த ஹாவ் பிளட் பிரின்ஸ் - விமர்சனம்


மயூரேசனின் பதிவா??? ஐயோ ஹரியைப் பற்றி ஏதாவது எழுதித் தொலைத்திருக்கப் போகின்றான் என்று நீங்கள் முணு முணுப்பது எனக்குக் கேட்கின்றது. ஆயினும் என்ன செய்ய வாசித்து முடித் புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் போட வேண்டாமா?

The Harry Potter and the Half Blood Prince ஹரி பொட்டர் தொடரில் கடைசியாக வந்ததும், ஒப்பீட்டளவில் கொஞ்சம் அலட்டல் நிறைந்த புத்தகமும் கூட. புத்தகத்தின் முதல் அரைப் பகுதி வெறுமனே சம்பவங்களைக் கோர்த்துக் கோர்த்து நகர்த்தப் படுகின்றது. வழமை போல கடைசி 200 பக்கங்களில் பொறி பறக்கின்றது. பக்கங்களைப் புரட்டும் போது கையும் புத்தகத்தின் பக்கமும் உரசிப் பொறி பறக்கும்மளவிற்கு வேகமாக பக்கங்களைத் திருப்பித் திருப்பிப் படித்தேன்.

கதையின் ஆரம்பம் பிருத்தானிய பிரதமரைக் காட்டுவதுடன் தொடங்குகின்றது. அதாவது மகிள்ஸ்சின் (மந்திரம் தெரியாத சாதாரண மக்கள்) பிரதமருக்கு மந்திர தந்திர அமைச்சு எவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பு கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றனர். நாட்டில் பல பிரதேசங்களில் இயற்கை அழிவுகள் நடைபெறுகின்றன. இதை இயற்கை அழிவில்லை டெத் ஈட்டர்ஸ் (பிணத் தின்னிகள் என்று சொல்லலாம், வால்டமோட்டின் படையணி) நடத்திய முடித்த நாசகார வேலை என்று சொல்கின்றனர். விரைவில் அனைத்தும் தீர்க்க முயற்சிப்பதாகவும் மந்திர தந்திர அமைச்சு தெரிவிக்கின்றது. இதே வேளை பழைய மந்திர தந்திர அமைச்சர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் பதவி ஏற்கின்றார்.

வழமையாக வித்தியாசமான முறையில் டட்லி வீட்டில் இருந்து வெளியேறும் ஹரியை இம்முறை டம்பிள்டோர் நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றார். அத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும் வரை டட்லி வீட்டில் அவனுக்கு இடம் வழங்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லி விட்டுச் செல்கின்றார். மந்திர உலகில் 17 வயதானதும் வயது வந்தவராகக் கணிக்கப்படுகின்றனர். ஆகவே அடுத்த வருடத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும். எனவே இந்த முறையும் பாடசாலை முடிந்ததும் டம்பிள்டோரின் வேண்டுதலின் படி மீண்டும் டட்லி வீட்டிற்கு செல்ல வேண்டிய தேவை ஹரியிற்கு இருக்கின்றது.

ஹரியை அழைத்துச் செல்லும் டம்பிள்டோர் அவனை பரோவிற்கு (வீஸ்லி குடும்பத்தின் வீடு) அழைத்துச் செல்ல முன்பு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். ஹாக்வாட்சில் இப்போது ஒரு ஆசிரியர் தேவைப்படுவது நீங்கள் அறிந்ததே. அதாவது தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பித்த உம்பிரிச் இப்போது பாடசாலையில் இல்லாததால் புதிய ஆசிரியரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதனால் டம்பிள்டோர் புதிய ஆசிரியரைத் தேடி ஹரியுடன் செல்கின்றார். அந்தப் புதிய ஆசிரியர் பாடசாலைக்குத் திரும்ப ஹரியே முழுமுதற் காரணமாக அமைகின்றான்.

பின்பு வீஸ்லி குடும்பத்தின் வீடு செல்லும் ஹரி அங்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் Fலோர் டெலகோர் (Tri Wizard championship - ரை விசார்ட் சம்பியன்சிப்பில் வந்த பெண்) பில்லை காதலிப்பதாகவும் விரைவில் மணம் முடிக்க இருப்பதாகவும் அறிகின்றார். இதே வேளை fலோர் இல் அவ்வளவாக நாட்டம் இல்லாத திருமதி வீஸ்லி டாங்ஸ்சை தன் பையன் பில்லுடன் சேர்த்துவைக்க விரும்புகின்றார். எது எதுவாயினும் அனைவரும் விரும்புவது நடப்பதில்லையே!! இதே வேளை பிரட்டும், ஜோர்ஜ்ஜூம் டயகன் அலியில் ஒரு கடை போட்டு நல்ல வருமானம் ஈட்டுகின்றார்கள். இம்முறை கதையில் இவர்களின் பங்கு மிகக் குறைவு. இவர்களின் குறும்புகளைப் பாடசாலை மிஸ் பண்ணுகின்றது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பு : நீங்கள் Harry Potter and the Order of Phoenix திரைப்படம் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்காதீர்கள். அந்தக் கதையின் சில முடிவுகளை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.

டாங்ஸ் வேறு ஒருவர் மேல் காதல் கொண்டிருப்பதை ஹரி தெரிந்துகொள்கின்றான். அது சிரியஸ் பிளக்காக இருக்குமோ என்று ஹரி சந்தேகப் படுகின்றான். ஆயினும் கதையின் இறுதியிலேயே அது யார் என்று தெரியவருகின்றது.

சிரியஸ் பிளாக்கின் (ஹரியின் காட் fபாதர்) மரணம் ஹரியின் மனதில் தொடர்ந்தும் துன்ப அலைகளைத் தோற்றுவித்தவாறே இருக்கின்றது. இதற்கு மத்தியில் ஆச்சரியத்திற்கு ஏணி வைத்தாற் போல புதிய ஆசிரியரான ஸ்லொக்கன் மந்திரக் கசாயம் காய்ச்சும் பாடத்திற்கு அமர்த்தப்படுகின்றார். அப்போ தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பிக்கப் போவது யார்??? ஸ்னேப் அந்தப் பதவியைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்ததும் ஹரியின் உள்ளம் கொதிக்கின்றது.

மந்திரக் கசாயம் காய்ச்சும் வகுப்பில் ஹரியிற்கு புதிய புத்தகம் ஒன்று இல்லாததால், பழைய புத்தகம் ஒன்றை ஆசரியர் ஸ்லோகனிடம் வாங்கி படிக்கின்றான். அந்தப் புத்தகம் தன்னை ஹாஃப் பிளட் பிரின்ஸ் (The Half Blood Prince) என அடையாளப்படுத்திக் கொண்டவரின் புத்தகமாகும். அந்த ஹாவ் பிளட் பிரின்சின் உதவியுடன் ஹரி பல்வேறு கசாயங்களை மிக இலகுவாகக் காய்ச்சி விடுகின்றான். வழமை பேல ஹர்மானிக்கு அந்தப் புத்தகத்தின் மேல் கடும் வெறுப்பு. குறுக்கு வழியில் இவ்வாறு செய்வது ஆபத்து என்றும், அந்தப் புத்தகத்தை எவ்வாறு நம்புவது என்றும் ஹர்மானி அடிக்கடி ஹரியை நச்சரித்தாலும் ஹரி மசியவில்லை. கதையில் கடைசி நிமிடங்களிலேயே யார் அந்த ஹாஃப் பிளட் பரின்ஸ் என்பது தெரியவருகின்றது.
இதே வேளை ஸ்னேப் பற்றி ஒரு தெளிவின்மை கதைகளில் தொடர்ந்து வருகின்றது. அவர் வால்டமோட் பக்கமா இல்லை டம்பிள்டோர் பக்கமா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. ஆயினும் இந்தக் கதை தொடக்கத்தில் அந்தப் பிரச்சனை தெளிவாக்கப்படுகின்றது. ஸ்னேப் எப்படிப்பட்ட நபர் என்பதை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் (அல்லது 2008 வரை பொறுத்திருங்கள் திரைப்படம் வரும்வரை).

மால்ஃபோய் இந்தக் கதையில் முழு டெத் ஈட்டராக வடிவம் கொள்கின்றான். மல்ஃபோயின் மேல் சந்தேகம் கொள்ளும் ஹரி அவனைத் தொடர்ந்து கவனித்தாலும் அவனை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது. ரூம் ஆப் ரிக்குயார்மென்ட் (Room of requirement) இல் ஏதோ கள்ள வேலை செய்யும் மால்ஃபோயை உள்சென்று ஹரியால் மடக்க முடியாமல் இருக்கின்றது. இந்த அறையையே முன்பு ஹரி டம்பிள்டோர் ஆமி என்ற குழுவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தினார்.

கதையின் முக்கியமான விடையம் டம்பிள்டோருடனான ஹரியின் வகுப்புகள். டம்பிள்டோர் தான் அறிந்த, அதாவது தனது வால்டமோட்டுடனான சந்திப்பு, வால்டமோட்டின் வாழ்க்கையில் நடந்த சில நினைவுகள் என்பவற்றை பென்சீவின் (நினைவுகளைச் சேமித்து வைக்க உதவும் பேளை) உதவியுடன் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் ஹரியை இறுதி யுத்தத்திற்குத் தயார் படுத்துகின்றார்.

இந்தப் பாடங்களின் மூலம் வால்டமேர்ட் தனது உயிரை ஏழு இடங்களில் வெவ்வேறு பொருட்களில் மறைத்து வைத்துள்ளதாக நினைக்கின்றனர். அதில் ஒன்று ஏற்கனவே ஹரியினால் அழிக்கப்பட் டயரியாகும். அதாவது அந்த டயரியே சேம்பர் ஒவ் சீக்ரட்டைத் திறந்து அந்தப் பாம்பை வெளியே வர வைத்தது(2ம் பாகம்). மற்றய ஒன்றை டம்பிள்டோர் அழித்திருந்தார். இன்னுமொன்று இப்போது இருக்கும் வால்டமோட்டின் உடலில் உள்ளது. இந்த உயிர் ஸ்தானங்கள் அனைத்தையும் அழித்தால் அன்றி வால்டமோட்டை அழிக்க முடியாது என்று அறிந்து கொள்கின்றனர். இந்த உயிர் ஸ்தானங்கள் ஹோகிரக்சஸ் (Horcruxes) என்று அழைக்கப்பட்டது.

இப்படிக் கதை சீரியசாகச் சென்றுகொண்டு இருக்கும் போது இடையில் நமது நண்பர்களான ரொண், ஹர்மாணி, ஹரி போன்றோரின் காதல் லீலைகளும் அரங்கேறுகின்றது. ரொண், ஹர்மாணி ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பெரும்பாலும் சண்டை இட்டுக்கொண்டனர். இது போதாதென்று ஹர்மானியை கோவப்படுத்த அந்த இந்தியப் பெண்ணான லவந்தருடன் சேரும் ரொண் பின்னர் லவந்தரிடம் இருந்து கழற்றுப்பட படும் பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது.

ஹரியின் முன்னய காதலி சோவுடனான காதல் முறிவடைந்ததைத் தொடர்ந்து இப்போது இவருக்கு ஒன்றும் இல்லாமல் தனிமரமாகத்தான் இருக்கின்றார். ஆயினும் இப்போது ஹரி தான் காதலிப்பது தன் உற்ற நண்பனின் தங்கை என்பதை அறிந்து காதலைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் குற்ற உணர்வுகளுடன் அவஸ்தைப்படுகின்றார். இவர்களின் காதல் என்னாச்சு... ஜின்னி ஹரியைக் காதலித்தாரா என்பதை எல்லாம் புத்தகத்தில் வாசித்து அறிந்துகொள்ளுங்கள். கண்ணெதிரே தோன்றினாள் படத்தை ரெளலிங் பார்த்தாரோ தெரியாது!!!

கடைசியாக டம்பிள்டோருடன் ஹரி ஒரு Horcruxes ஐத் தேடி ஒரு குகைக்குச் செல்கின்றனர். இங்கேயே எல்லாம் தலைகீழாக மாறுகின்றது. அந்தக் குகையில் நடக்கும் நிகழ்ச்சிகள்பற்றிச் சொல்லி மாளாது. அத்தனை பரபரப்பு.. விறுவிறுப்பு.. வாசித்தால்தான் தெரியும் அந்த அனுபவம்.

கிளைமாக்ஸ் ஹாக்வாட்ஸ் பாடசாலையில் நடக்கின்றது. முந்திய பாகத்தில் மந்திர தந்திர அமைச்சிலேயே கிளைமாக்ஸ் ஆனால் இம்முறை பாடசாலையினுள்ளேயே டெத் ஈட்டர்ஸ் நுழைந்துவிடுகின்றனர். கடும் சண்டை மூள்கின்றது. பாடசாலை ஆசரியர்கள், ஆடர் ஆப் பீனிக்ஸ்சைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஹரியினால் பயிற்றுவிக்கப்பட்ட DA (Dambledore’s Army) டம்பிள்டோர் ஆமியும் களத்தில் இறங்கி போராடுகின்றது. மயிர்கூச்செறியும் யுத்தம். ரொண், ஹர்மானி, லூனா, நெவில், ஜின்னி, மற்றும் பலர் களத்தில் போராடுகின்றனர். போராட்டம் என்றால் நிச்சயம் இழப்புக்கள் இருக்கும் அல்லவா!!! இங்கும் அவாடா கெடாவ்ரா (மரணத்தை விளைவிக்கும் மந்திரம்) பாவிக்கப்படுகின்றது. யாரால் யார் மேல் என்பதுதான் நீங்கள் வாசித்து அறிய வேண்டும்.

கடந்த பாகத்தில் சிரியஸ் பிளாக்கைக் முடித்து வைத்த ரெளலிங் இந்தப் பாகத்தில் இன்னும் ஒரு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக.............மிக..... முக்கியமான ஒரு பாத்திரத்தை முடித்துவிடுகின்றார். வர வர ரெளலிங் இப்படி கல்நெஞ்சக்காரியாகி வருவது நெஞ்சை உலுக்குகி்ன்றது. அடுத்த பாகத்தில் என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஆகமொத்தத்தில் ஹரிபொட்டர் தொடரில் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டமைந்த ஒரு புத்தகம். சர்வதேச ரீதியில் வெற்றி பெற்றமை பற்றி ஆச்சரியப்படுவதற்கி்ல்லை. லார்ட் ஆப் த ரிங்ஸ் கதைக்குப் பிறகு இப்படியான கதைகளை எழுத ஆங்கில எழுத்தாளர்கள் தொடந்து முனைகின்றர். தமிழில் இப்படியான கதைகள் எழுதப்படுமா? எழுதப்பட்டாலும் அவை வெற்றி பெறுமா? என்பதெல்லாம் காலத்தின் மீதுள்ள கேள்விகள்.

அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கின்றேன். நான் மட்டுமே இப்படி ஹரி பைத்தியம் என்று நினைத்த போது பல்கலையில் என்னைப் போல பல பைத்தியங்கள் இருக்குது என்பதை அறிந்துகொண்டேன். I just can’t wait till I lay my hands on the next book என்று சொன்ன சிங்கள நண்பியைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொண்டேன். விசருகள் கனக்க இருக்குது. நான் இதுகளோட ஒப்பிட்டா எவ்வளவோ பரவாயில்லை. பொதுவாகப் பொடியங்களை விடப் பெட்டைகளே ஹரி பொட்டர் புத்தகத்தில் பைத்தியமாக இருப்பதையும் கவனித்தேன். எது எப்படியானாலும் பல்கலைக்கழகத்தில் ஒரு உத்தியோக பூர்வமற்ற ஹரி கிளப் இருக்குதுங்கோ!!!!

அடுத்த புத்தகத்தில் எல்லாம் சுபமாக முடிய ஹரிக்காக ஒரு நிமிட இறைவணக்கம் செலுத்தி இந்த நீண்ட பதிவை முடிக்கின்றேன்.

அன்புடன்,
ஜெ.மயூரேசன்.

3 February 2007

60 : ஜூலை மாதத்தில் கடைசி ஹரிபோட்டர் புத்தகம்


























"Harry Potter and the Deathly Hallows," என்ற கடைசிப் புத்தகத்துடன் ரெளவ்லிங்கின் பிரபலமான ஹரிபோட்டர் கதை முடிவிற்கு வருகின்றது. இந்த கடைசிக் கதைப்புத்தகம் ஜூலை 21 ல் வெளிவரும் என எழுத்தாளர் ரெளலிங் தெரிவத்தார்.

இத்தகவலை ரெளலிங் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வெளியீட்டாளரான புளூம்பரி நிறுவனம் கருத்துத் தெரிவிக்கைளில் இவர்கள் சிறுவருக்கான பதிப்பு, வயது வந்தவருக்கான பதிப்பு மற்றும் ஒலிபுத்தகம் என்பவற்றை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியீட்டாளர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தப் புத்தம் $34.99 விலைக்குக் கிடைக்கும் என்று கூறினார். டிலுக்ஸ் பதிப்பு 65 அமெரிக்க டாலருக்கும்.. ஹார்ட் பக் லைப்ரரிப் பதிப்பு 39.99 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

முதலாவது பாகம் வெளியிட்டு இன்றுடன் 10 வருடங்கள் முடிவடைவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது 325 மில்லியன் வரை பொட்டர் புத்தகங்கள் விற்றுத் தீர்த்துள்ளன. இது 64 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (சிங்களம் உட்பட).

கடைசியாக வெளிவந்த புத்தகமான “Harry Potter and the Half-Blood Princes,” என்ன புத்தகம் பிருத்தானியாவில் மட்டும் 2 009 574 பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளன.

புத்தகம் வெளிவரும் விடையம் லண்டன் பங்குச் சந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்னது என்றால் பாருங்கள் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு இது வளர்ந்துள்ளது.

மேலும் தகவல்களுக்குப் எழுத்தாளரின் தளத்தைப் பார்க்க....