6 November 2006

45 : யாருக்கு இலவசம் (சிறுகதை) - தேன்கூடு போட்டிக்காக

Photobucket - Video and Image Hostingவானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம்.

அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவியென்று. கண்களை சுருக்கி மழைத் தூறலூடு யாரையோ தேடினாள். அவளுக்குத் தெரியும் மழையென்றால் இவன் நனையவென்றே வெளியில் ஓடிவிடுவான்.

“டேய்! சின்னத்தம்பி.....! எங்கையடா நிக்கிறாய்?” தன் கடைக்குட்டியைச் சற்றே உரிமையோடு அதட்டிக் கூப்பிட்டாள்.

“ஓம் அம்மா! வாறேன்!!” பக்கத்துக் காணிக்குள் இருந்து சத்தம் வந்தது.

வரட்டும் இண்டைக்கு நல்ல முறி முறிச்சு விடுறன். எத்தின தரம் சொன்னாலும் இவன் தான் நினைச்சதத்தான் செய்யிறான் என மனதுக்குள் நெறுவிக்கொண்டாள் அன்புத்தாயார் கண்ணம்மா.

“இஞ்சருங்கோ இண்டைக்கும் இவன் மழையில நனைஞ்சு போட்டு வாறான். நீங்கள் தேப்பன் எண்டு இருக்கிறியள் அவனக் கொஞ்சம் கண்டிக்க மாட்டியளே?” விறாந்தையோரத்தில் கதிரையில் இருந்து வெத்திலை சப்பிக்கொண்டிருந்த தன் கணவனைக் கடிந்து கொண்டாள்.

“நீங்கள் மட்டும் அவனுக்கு அடிக்கிறியளே? சும்மா வாய் கிழியக் கத்திறது அவன் வந்து முன்னால நிண்டதும் முறிச்சுப் போடுவன் என்டு வெருட்டுறது. இதவிட்டா வேற என்ன செய்யிறியள். சும்மா என்னையும் அவனையும் ஏத்திவிடப் பார்க்காதையுங்கோ” தகப்பனார் தன் மகனுடன் கண்டிப்பாக இருக்க மாட்டேன் என்பதைத் தெளிவாகக் கூறினார்.

கண்ணம்மா சுந்தரேசன் தம்பதியர் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 10 மைல் தூரத்தில் உள்ள அந்த சிறியக் கிராமத்தில் வசிக்கின்றனர். ஆசைக்கொன்று ஆஸ்திக்கொன்று என ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள். மூத்தவள் பிறந்து ஏழு வருடங்களின் பின்னர் சின்னத்தம்பி பிறந்தான். இயல்பாகவே வீட்டில் செல்லம். அவன் செய்யும் அடாவடியை யாரும் தட்டிக் கேட்பதில்லை. பாவம் பிஞ்சு மழலை என்று தாயும் தந்தையும் கண்டிக்காமல் விட அன்பு அக்காவோ அதைவிட ஒரு படி மேல் சென்று தன் தம்பிமேல் அளவு கடந்த அன்பு காட்டுவாள். மொத்தத்தில் இந்த ஐந்து வயதுப் பாலகனுக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை.

சின்னத்தம்பி இப்போ மழைச் சாரலில் நனைந்தபடி விட்டினுள் நுழைந்தான். வழமைபோல தாயார் தன் பாணியிலான வசைபாடிள் தகப்பனாரும் தன் பங்கிற்கு பொறுமையாக தன் பாணியில் சும்மா ஒப்புக்கு புத்திமதி கூறினார். சின்னத்தம்பிக்குத் தெரியும் அவ்வளவுதான் பின்னர் அனைத்தையும் இவர்கள் மறந்து விட்டு தன்னுடன் செல்லம் கொட்டுவார்கள் என்று.

“சரி போய் தலையை துடைச்சுக் கொண்டு வா! குசினிக்குள்ள தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கிறன் எடுத்துக் குடி”

“ஏன் அம்மா இண்டைக்கு சீனி போட்ட தேத்தண்ணியோ இல்லாட்டி இண்டைக்கும் சீனி இல்லையோ? சீனி இல்லாட்டி எனக்கு தேத்தண்ணி வேண்டாம்”.

“என்னப்பு நீ! உனக்குத் தெரியும்தானே இப்ப யாழ்ப்பாணத்திற்கு சாப்பாடுச் சாமான் ஒன்டும் வாறதில்லை எண்டு” பொறுமை இழக்காமல் கூறினார் சுந்தரேசன்.

“அப்பா அப்ப நாங்கள் கொழும்புக்குப் போவமே! அங்கையெண்டால் சீனி இருக்கும் தானே”

“ஓமடா தம்பி கொழும்பில சீனி இருக்கும் ஆனால் நிம்மதி இருக்காதுடா. செத்தாலும் இங்க இருந்து செத்தால் தூக்கிப்போடவாவது யாராவது வருவாங்கள்” மனவிரக்தி யாருடன் பேசுகின்றோம் என்பதைக் கூட யோசிக்காமல் அவரைப் பேச வைத்தது.

இதே வேளையில் பக்கத்தது வீட்டுக் கமலா வேலிக்குள்ளால் எட்டிப் பார்த்தாள்.

“கண்ணம்மா அக்கா! நேற்று கொழும்பில இருந்து வந்த கப்பலில கொஞ்சம் சாமான் வந்திருக்காம். இண்டைக்கு சங்கக்கடையில சாமான் குடுக்கிறாங்களாம். இப்பத்தான் எங்கட இவர் போய் சீனி எடுத்துக் கொண்டு வந்தவர். 3 கிலோ சீனி குடுத்து இருக்கிறாங்கள் அக்கா. சனம் நிரம்ப முதல் போய் லைனில இடத்தப் பிடியுங்கோ” சட சடவெனக் கூறிவிட்டு மழையில் தன் தலை நனையாதிருக்க கைகளை தலைக்கு மேலே பிடித்தவாறு வீட்டினுள் ஓடினாள் கமலா.

கணவனுக்கோ கடும் காய்ச்சல் இன்று வேலைக்கும் போகவில்லை. மழையில் எப்படி அவரை நனைந்து கொண்டு போகச் சொல்லுவது. அவளிற்கு இப்போ தெரிந்தது கண்முன்னே நின்ற சின்னத் தம்பிதான்.

“டேய் சின்னத்தம்பி! ஓடிப்போய் சங்கக்கடைக்கு முன்னால நிக்கிற லைனில இடத்தைப் பிடி நான் வந்ததும் நீ வீட்ட திரும்பலாம். அம்மா சாறியக் கட்டிக் கொண்டு கெதியாவாறன்”

சின்னத் தம்பிக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலானது. இப்போது ஆசைக்கு மழையில் நனையலாம்.

“பீப் பீப் பீப்....” தான் ஏதோ கார் ஓடுவது போன்று பாவனை செய்து கொண்டே சாட்டுக்குக் குடையையும் பிடித்துக் கொண்டு சந்தியில் இருக்கும் சங்கக் கடையை நோக்கி ஓடத் தொடங்கினான் சின்னத்தம்பி.

ஐந்து நிமிடங்களில் அவன் கடைவாயிலில் நின்றிருந்தான். வரிசை அவ்வளவு நீளமாக இல்லை. உணவுப் பஞ்சம் மீண்டும் ஒரு தடவை யாழ்ப்பாணத்தில் தலைவிரித்து ஆடத் தொங்கிவிட்டதை நினைவு படுத்தும் முகமாக சங்கக் கடை வாசலில் மக்கள் மெல்ல மெல்ல வந்து நிறையத் தொடங்கினர். மூன்று கிலோ சீனிக்கு மூன்று மணிநேரம் காத்திருக்கவும் இவர்கள் இப்போது தயாராக இருந்தார்கள்.

அடுத்த சில நிமிடத் துளிகளில் சின்னத்தம்பியின் அன்புத்தாயார் கண்ணம்மாவும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.

“சின்னத்தம்பி.. நல்ல காலம் நீ வந்து இடம் பிடிச்சாய்! இல்லாட்டி இப்ப நானும் லைனில பின்னாலதான் நிண்டிருக்கோணும்” பரிவுடன் கூறினாள் தாயார். வாய் நிறையச் சிரிப்புடன் தாயாரின் பாராட்டை ஏற்றுக்கொண்டான் அந்தப் பாலகன்.

அடுத்து சில நிமிங்களில் இவர்களுக்கான மூன்று கிலோ சீனி இலவசமாகக் கிடைத்துவிட்டிருந்தது. கண்ணம்மா அதை கவனமாக இரு கைகளாலும் ஏந்தியபடி கடையை விட்டு இறங்கினாள்.

கடவுளே இத்தனை நாட்களிற்குப் பின்னர் இன்றுதான் மீண்டும் சீனித் தேத்தண்ணி குடிக்கப் போறம்... மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

“அம்மா! பையை என்னட்ட தானே! நான் கொண்டு வாறன்”

“சும்மா இருடா உன்னோட பெரும் கரைச்சல்” நோகாமல் கடிந்து கொண்டாள் கண்ணம்மா.

“அம்மா! நான் கவனமாக் கொண்டருவன்... தாங்கோ!!!”

இரட்டை மனத்துடன் கண்ணம்மா தன் மகனிடம் பையைக் கொடுத்தாள். பையை வேண்டியதுதான் தாமதம் மீண்டும் பீப் பீப் எனச் சத்தம் இட்டவாறு ஓடத்தொடங்கினான் சின்னத்தம்பி.

“டேய்.. டேய்.. பார்த்துடா! பை கிழிஞ்சு போகப்போகுது.....”

அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பை கிழிந்து சீனி அவ்வளவும் காலை பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அருகாமையில் விழுந்து விட்டது.

இரண்டடி முன்னே சென்ற கண்ணம்மா பளீர் எனச் சின்னத்தம்பியின் கன்னத்தில் ஒரு அறை விட்டாள். பாலகனோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தாங்காமல் ஒரு வினாடி சிலையாய் நின்றிருந்தான். மறு கணம் கண்ணீர் மல்க வீடு நோக்கிக் கட கடவென நடக்கத் தொடங்கினான்.

“போ போ வீட்ட வைச்சு உனக்கு நல்ல முறி தாறன்” சீனித் தேத்தண்ணி கனவு கலைந்த கோபத்துடன் கூறிய கண்ணம்மா சின்னத்தம்பியின் பின்னால் நடக்கத் தொடங்கினாள். சற்றே நடந்தவள் மனம் கேட்காமல் சீனி கொட்டுப்பட்ட இடத்தை திரும்பிப் பார்த்தாள்.

மழை வெள்ளத்திற்கு அப்பால் இருந்த குடிசை வீட்டில் இருந்த ஒரு சின்னப் பெண் எப்பிடியும் சின்னத் தம்பியிலும் இரண்டு வயசு அதிகமாக இருக்கலாம், மட மட என கொட்டுப் பட்ட சீனியை தன் கிழிந்த பாவாடைத் துணியில் போட்டுக் கொண்டு இருந்தாள். மழை வெள்ளம் நன்கு ஊற முதல் சீனியை அள்ளிவிட வேண்டும் என்பதில் அவள் குறியாக இருந்தாள். அவள் வாடிய முகம் சாப்பிட்டு சில நாட்களாவது இருக்கும் என்று சொல்லாமல் சொல்லியது.

இப்போது கண்ணம்மாவின் கண்களில் இருந்து சில சொட்டுக் கண்ணீர்த் துளிகள் வழிந்தோடி வந்து அந்த இரத்தம் தோய்ந்த வரலாறு கொண்ட மண்ணில் விழுந்தது. அவள் வலிமைக்கு முடிந்தது சில கண்ணீர் துளிகளை அந்த அபலைச் சிறுமிக்காகச் சிந்துவதுதான்.

பி.கு (தமிழக உறவுகளுக்காக) : சீனி எனப்படுவது தமிழகத்தில் சர்க்கரை என நீங்கள் அறிந்த பண்டத்தையே!

22 மறுமொழி:

said...

முதல் வாசிப்பில் இலங்கைத் தமிழ் நடையை உள்வாங்கிக் கொள்வதில் சிறிது சிரமம் இருந்தாலும், உணர்வுகளை சேர்ப்பதில் கதை வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பு: தமிழகத்தில் மதுரைப் பகுதியிலும் சர்க்கரையை 'சீனி' என்றே அழைப்பது வழக்கம்.

said...

அன்பின் மயூரேஷன்.....
நல்ல கதைங்க.....
சிங்கள பாஷை இன்னுங்கூட வலிமை சேத்துடுச்சு....
நெகிழ்ச்சியான கதை....


வெற்றி பெற வாழ்த்துக்கள்....

said...

உருக்கும் கதை மயூரேசன்
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்...

பிகு. தென் தமிழகத்திலும் வெள்ளைச் சர்க்கரையைச் சீனி என்றுதான் சொல்லுவோம்.

said...

//Collapse comments


இன்பா said...
முதல் வாசிப்பில் இலங்கைத் தமிழ் நடையை உள்வாங்கிக் கொள்வதில் சிறிது சிரமம் இருந்தாலும், உணர்வுகளை சேர்ப்பதில் கதை வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பு: தமிழகத்தில் மதுரைப் பகுதியிலும் சர்க்கரையை 'சீனி' என்றே அழைப்பது வழக்கம்.//
உள்வாங்கிக் கொள்வதில் இருக்கும் பிரைச்சனை சாதாரணமானது!
உங்களூரிலும் சீனி என்றா சொல்வார்கள்!! என்ன நாங்கள் இந்தியத் தமிழ் என்று பார்ப்பது கேட்பதெல்லாம் இந்தியச் சினிமாதானே!!

said...

//அன்பின் மயூரேஷன்.....
நல்ல கதைங்க.....
சிங்கள பாஷை இன்னுங்கூட வலிமை சேத்துடுச்சு....
நெகிழ்ச்சியான கதை....


வெற்றி பெற வாழ்த்துக்கள்....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அமுதன் ஆனால் இது சிங்களமல்ல இது இலங்கைத் தமிழ்!!
புரிந்து கொள்ளுங்கள்... ஏன் எங்கள் தமிழை சிங்களமாக்குகின்றீர்கள்.??

said...

//உருக்கும் கதை மயூரேசன்
போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்...

பிகு. தென் தமிழகத்திலும் வெள்ளைச் சர்க்கரையைச் சீனி என்றுதான் சொல்லுவோம்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரதீப் அண்ணா!
சீனி என்பது இந்தியாவிலும் பாவிக்கின்றார்கள் என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன்!! தகவலுக்கு நன்றி!!

said...

அழகான சிறு கதை.

கொழும்பில் இருந்து உண்மையாகவே சீனி இலவசமாக வருமா? தருவது யார்?

இல்லை, கதைக்காக எழுதியதா?

said...

//அழகான சிறு கதை.

கொழும்பில் இருந்து உண்மையாகவே சீனி இலவசமாக வருமா? தருவது யார்?

இல்லை, கதைக்காக எழுதியதா?//
உலக நாடுகளுக்கு தாம் தற்போது யாழ் மக்களுக்கு உணவு அனுப்புவது போல நாடகமாடிக் கொண்டு இப்படியாக சிறியஅளவில் பண்டங்களை கண்துடைப்பிற்கு அனுப்புவது போல அனுப்பி பெரும்பகுதி இராணுவத்திற்கு போக மிகுதியை மக்களுக்கு வழங்கும் வள்ளல் இலங்கை அரசே அன்றி வேறு யாருமில்லை!!!!

said...

மயூரேசன்....ஏம்ப்பா இப்பிடி...போனவாட்டி விடுதலையிலயும் என்னைய கண்கலங்க வெச்ச. இதுலயும் இப்படி. இந்த வாட்டியும் என்னோட வாக்கு உனக்குண்டு. :-) என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இயல்பாய் நிகழ்வுகளைக் கொண்டு வரும் உனது எழுத்துகளில் நல்ல வளம் உள்ளது. இன்னும் சிறப்பாக முயன்றால் தமிழெழுத்தில் தனியிடம் கிடைக்கலாம். என்னுடைய வாழ்த்துகள்.

தூத்துக்குடி திருநவேலிப் பக்கத்தில் ஜீனி என்போம்.

said...

//மயூரேசன்....ஏம்ப்பா இப்பிடி...போனவாட்டி விடுதலையிலயும் என்னைய கண்கலங்க வெச்ச. இதுலயும் இப்படி. இந்த வாட்டியும் என்னோட வாக்கு உனக்குண்டு. :-) என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இயல்பாய் நிகழ்வுகளைக் கொண்டு வரும் உனது எழுத்துகளில் நல்ல வளம் உள்ளது. இன்னும் சிறப்பாக முயன்றால் தமிழெழுத்தில் தனியிடம் கிடைக்கலாம். என்னுடைய வாழ்த்துகள்.

தூத்துக்குடி திருநவேலிப் பக்கத்தில் ஜீனி என்போம்//

நன்றி இராகவன் அண்ணா!
நான் எழுத தமிழ் மன்றத்தில் நீங்கள் மற்றது பிரதீப் அண்ணா போன்றவர்கள் தந்த ஆதரவே வழி கோலியது....
என்னால் முயன்றவரை உண்மையை யதார்த்தமாகப் படம் பிடிக்க முயல்கின்றேன்...
மீண்டும் ஒரு தடவை நன்றி இராகவன் அண்ணா!!!

said...

வெற்றி பெற வாழ்த்துக்கள் மயூரேசன்

said...

மயூரேசன் நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

said...

உங்களோட தமிழ் அழகே அழகு. அழகான தமிழில், கனமான கதையொன்றைக் கொடுத்துவிட்டீர்கள். நன்றாக இருந்தது. காட்சிகளைக் கண் முன் கொண்டு வந்த்துவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்..நிறைய எழுதுங்கள்.

said...

//வெற்றி பெற வாழ்த்துக்கள் மயூரேசன்//
நன்றி கானாப்பிரபா

said...

//மயூரேசன் நல்ல கதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.//
உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி திரு முரளீதரன் அவர்களே!

said...

//உங்களோட தமிழ் அழகே அழகு. அழகான தமிழில், கனமான கதையொன்றைக் கொடுத்துவிட்டீர்கள். நன்றாக இருந்தது. காட்சிகளைக் கண் முன் கொண்டு வந்த்துவிட்டீர்கள்.

வாழ்த்துக்கள்..நிறைய எழுதுங்கள்.//
உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி திரு நெல்லைசிவா அவர்களே! உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கம்தான் எங்களைப் போன்றவர்களை எழுதத் தூண்டுவது...

said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!!!
தொடர்ந்து வந்து படைப்புகளைப் படியுங்கள்.

said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!!!
தொடர்ந்து வந்து படைப்புகளைப் படியுங்கள்.

said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி!!!
தொடர்ந்து வந்து படைப்புகளைப் படியுங்கள்.

said...

நல்ல நேட்டிவிட்டியோட உள்ள கதை..வெற்றிக்கு வாழ்த்துக்கள்..

said...

மிக நல்ல ஒரு சிறுகதை. யாழுக்கருகில் சற்று கூட்டிச்சென்று விட்டீர்கள்.

சீனி என்பதை வெள்ளை சர்க்கரை என்று தமிழகத்தின் பல பகுதியிலும் அறிவார்கள்.

"தின்ன உனக்கு சீனி முட்டாய் வாங்கித் தரட்டுமா....." திரைப்பட பாடல் வரிகள்.

said...

//நல்ல நேட்டிவிட்டியோட உள்ள கதை..வெற்றிக்கு வாழ்த்துக்கள்..//
எப்போதும் நிஜங்களைப் படம் பிடிக்கவே முயல்கின்றேன். வாழ்த்துக்கு நன்றி செந்தழல் ரவி அவர்களே!