14 February 2007

63 : என் காதல் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)


இது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கதை!! இன்று காதலர் தினம் என்பதால் இதைப் பதிக்கலாம் என்று தோன்றியது.. ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுமை காத்தருளவும்.

என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை.

அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த ஒரு தொகுதி கூந்தல்! கண்களை அகல விரித்தவாறு பேசும் அந்தத் தோறனை! எந்தப் பையனும் இதை மறக்கவே மாட்டான். சிங்களத்தை வெறுத்தாலும் இந்த சிங்களத்தியை மட்டும் என்னால் வெறுக்க முடிய வில்லையே.

அது போதாதென்று சிங்கள நண்பர்கள் என்னையும் இனோக்காவையும் ஒன்றாகக் கண்டதும் “ஆகா... அப்பிடியா விசயம் போகுது” என்று சத்தமிட்டது.... நினைத்து மீண்டும் ஒரு தடவை புன்முறுவல் பூத்துக்கொண்டேன்.

காலை கதிரவன் தன் கதிர்களை பரப்பி என் முதுகில் சூடு போடும் வரையில் நித்திரை கலையாத எனக்கு இன்று காலை நான்கு மணிக்கே விழப்பு வந்து விட்டது. ம்... எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கட கட வென காலைக் கடன்களை முடித்து காலை 6.45 க்கே வீட்டிலிருந்து பல்கலைக்கழகம் புறப்பட்டு விட்டேன்.

போகும் வழியில் எப்பிடி இந்த அழகுப் பிசாசு என் வாழ்வில் வந்து நர்த்தனம் ஆடத்தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தேன்.

நான் படிப்பது விஞ்ஞாண பீடத்தில் அவள் கற்பது முகாமைத்துவ பீடத்தில். பல்கலைக்கழக டோஸ்ட் மாஸ்டர் கிளப்பில்தான் அவளின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நல்ல நண்பியாக இருந்தாலும் காலப்போக்கில் ஒருவரை ஒருவர் அறியாமல் ஒருவரில் ஒருவர் அதிக உரிமை எடுக்க தொடங்கிவிட்டோம். உச்சக்கட்டமாக நேற்று தர்மாலோக ஹோலில் எல்லார் முன்னிலையிலும் என்னோடு ரெம்ப நெருக்கமாக உட்கார்ந்து விட்டாள். விசயம் கிசு கிசு என காட்டுத் தீ போல எனது டிப்பார்ட்மென்ட் முழுவதும் பரவிவிட்டது.

சுகததாஸ ஸ்டேடியம் பின் பக்கத்தில் உள்ள அந்த பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டு இருக்கின்றேன்.
தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த, கடவத்த, கடவத்த.... பஸ் நடத்துனர்கள் கூவிக்கொண்டு இருந்தனர். முதலாவது இரண்டாவது மூண்றாவது பஸ்சும் போய்விட்டது. மனது மிகவும் குளப்பமாக இருந்தது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

இன்றைக்கு கம்பஸ் போவதா? வேண்டாமா? போனால் அவளைக் கட்டாயம் சந்திக்க வேண்டுமே?
போகாவிட்டால் பாவம் அவள் டிபார்ட்மென்ட் வாசலில் காத்துக்கொண்டு நிற்பாளே எனக்காக?

இன்னும் குளப்பம் தீரவில்லை. கீழ் உதட்டை மேவாய் பற்களால் அழுத்தியவாறு கண்களை மூடிப் பார்த்தேன் ஏதாவது முடிவு தெரிகின்றதா என்று!!!!

தழுகம, களனி கம்பஸ், கிரிபாச்சிய, மகர, கடவத்த...........

மீண்டும் ஒரு தடவை இன்னுமொரு பஸ் வந்து விட்டது. சரி இப்ப முதலில பஸ்சில ஏறுவம் பேற வழியில என்ன செய்வது என்டு முடிவு செய்வம். பஸ்சில் ஏறிக்கொண்டேன்

“தம்பி எங்க?” சிங்களத்தில் கேட்டான் நடத்துனர்

“கம்பஸ் எக்கெனாய்” (கம்பஸ் ஒருவர்) சிங்களத்திலேயே பதில் கூறினேன்.

சட்டைப் பையில் இருந்து 12 ரூபாயை கணக்காக எடுத்து அவனிடம் கொடுத்தேன். இல்லாவிட்டால் என்ன மாத்தின காசு இல்லையா என்று வழமை போல பிளேடு போடுவான். டிக்கட் ஒன்றை கிழித்து கையில் திணித்து விட்டு

“இஸ்சரா சல்லி கண்ண” (முன்னே இருப்பவர்களே பணத்தை தாருங்கள்) கூவிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்தான்.

வழமைபொல சாலை நெருக்கடி. பஸ் வண்டி நின்று நின்று அரங்கி அரங்கிச் சென்று கொண்டு இருந்தது. வழமையாக ஐந்து நிமிடத்தில் வந்து விடும் பாலிய கொட சந்தியை இன்று 10 நிமிடத்தில வந்து சேர்ந்தது.

பஸ் நின்றதும் இன்னுமொரு தொகுதி கூட்டம் பஸ்சினுள் அடைபடத்தொடங்கியது. எனக்கு பக்த்தில் ஒரு ஆசனம் ஒருவரும் இல்லாமல் இருந்தது.

“ஹலோ மச்சான்!” இப்ப எனக்கு பக்கத்து ஆசனத்திலிருந்து ஒரு குரல்

“ஆ... ரொமேஸ்” என்னுடன் படிக்கும் சிங்கள நண்பன் ஒருவன்.

இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் சம்பாசனை தொடங்கியது

“என்னப்பா நீ நாங்களெல்லாம் எதிர்பார்க்காத காரியத்தில இறங்கிட்டாய். நீ இப்பிடி காதலில விழுவாயெண்டு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கேல” நக்கலாக கூறினான் அவன்

“டேய்! உங்களுக்கு என்ன விசராடா?. அப்பிடி ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல”.

“ஓ.........! ஒரு மண்ணாங்கட்டியும் இல்லாமத்தான் நேற்று தர்மாலோக ஹோலில அவளோட கதைச்சுக்கொண்டு இருந்தனியாக்கும்”

“ஏனடா! கம்பஸ்ல ஒரு பெட்டையோட கதைச்சா அதுக்குப் பெயர் காதலா?” கொஞ்சம் கோவமாகவே கேட்டேன்.

“நாங்களெல்லாம் எவ்வளவு கதைச்சும் அவள் எங்களோட அவ்வளவு கதைக்கேலயே?. உன்னோட தானே ஒட்டிக்கொண்டு இருந்தவள். நீயும் தானே முப்பத்தி இரண்டு பல்லையும் காட்டி வழிஞ்சு வழிஞ்சு கதைச்சுக்கொண்டு இருந்தனி”

“ரொமெஸ் ஏன் தேவையில்லாத கதையிப்ப?”

“டேய்! டேய்! மனசுக்குள்ள ஆசையை வைச்சுக்கொண்டு மனதுக்கு துரொகம் செய்யாதடா.... எல்லா தமிழ் பொடியங்கள் மாதிரி நீயும் உனக்கு நீயே வேலி போட முயற்சிக்கிறாய்! சரியா?”

“இல்ல மச்சான்........”

“சரி சரி! இப்ப நீ சொல்லு அவளில உனக்கு விருப்பமில்லையா? அவளுக்கு என்ன குறைச்சல் நல்ல வடிவுதானே? அவள் சிங்களம் எதிர்காலம் கஷ்டம் எண்டு மட்டும் யோசிக்காத. நாங்க ஃபுல் சப்போட்ட தருவம்”

“டேய்... இருந்தாலும் என்ற அப்பா அம்மாவுக்கு என்ன... பதில்....”

“நீ என்ன அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடவா போறாய்? அவையள் இத புரிஞ்சு கொள்ளுவினம். காதலிக்கிறது ஒண்டும் தப்பில்லையே! மற்றது நீ ஒண்டும குட்டி பபா இல்லையே! அம்மா அப்பா என்டு திரிய”

குளம்பி இருந்த குட்டையை நல்லா குளப்பி விட்டான். ஆனால் பாவம் அவன் அதில மீன் பிடிக்க மட்டும் முயலவில்லை. ஏதோ எனக்கு உதவி செய்ய முயலுகின்றான் என்று மட்டும் தெரிந்தது.

“ரொமேஸ்.... இண்டைக்கு காலையில டிப்பார்ட்மென்ட் வாசலில நிக்கிறதா சொன்னவள்டா! தனக்கு கடைசி முடிவை இண்டைக்கு சொல்லோனும் எண்டும் சொன்னவள்டா!”

“அதுக்கென்ன இப்ப? ஏன்தான் இப்பிடி பயந்து சாகிறியோ தெரியாது??” சலித்துக்கொண்டான்.

“அதில்ல மச்சான்..... சரி... நான் எனக்கும் சம்மதம் எண்டு சொல்லுறன்...”

“நான் சொல்லுறன் எண்டு சொல்லாத. நீ விரும்பிறாய் தானே அவள?” நெற்றியை சுருக்கியவாறே கேட்டான்.

“ஓம்!”

“எலகிரி மச்சான்!” அவன் முகத்தில் சந்தோசப் புன்னகை. அட என்முகத்திலும் தான்.

பஸ் கம்பஸ் வாசலில் வந்து நின்றது. நானும் ரொமேசும் பஸ்சில் இருந்து கீழே இறங்கினோம்.

“மச்சான் சொதப்பிடாத!!!!. நான் பின்னால வாறன் ஏதும் ஹெல்ப் எண்டா உடனே கூப்பிடு” கண்களை அகல விரித்தவாறு மிகவும் உற்சாகமாய் கூறினான்.

கம்பஸ் வாசலில் இருந்து நடக்க தொடங்கினேன். இன்னும் ஐந்து நிமிடத்தில் டிப்பார்ட்மென்டை அடைந்து விடுவேன்.

தூரத்தில் அவள் நிற்பது தெரிந்தது. வெள்ளை நிற ஸ்கேட்டும் பிளவுசும் போட்டு அழகான தேவதைபோல இருந்தாள். எனக்கு வாய் நிறைய கொள்ளை சிரிப்பு ஆனால் நெஞ்சு மட்டும் படக் படக் என்று அடித்துக்கொண்டது.

“மம ஒயாட ஆதரேய்.....” (சிங்களத்தில் நான் உன்னைக் காதலிக்கின்றேன்) ஒரு தடவை எனக்குள் கூறிப்பார்த்துக் கொண்டேன்.

இதே வேளை எனது டிப்பார்ட்மென்ட் பெட்டையள் இரண்டு பேர் என்னையும் இனோக்காவையும் பார்த்து விட்டு “குட் லக்........!” எனச் சத்தமாக கூறி சிரித்துக் கொண்டு சென்றனர்.

மேலும் இரண்டடி எடுத்து வைத்திருப்பேன் எனது செல்லிடத் தொலைபேசி சிணுங்கத் தொடங்கியது. எரிச்சலுடன் வெளியே எடுத்துப் பார்த்தேன் அம்மா கோலிங்.... சி.எல்.ஐ காட்டியது!!

உடனே தொலைபேசிக்கு பதில் அளித்தேன். மறு முனையில் அம்மா.

“தம்பி! நீ கேட்டனியெல்லே பி.சி.எஸ் பரீட்சைக்கு 30,000 ரூபா வேணும் எண்டு. நான் என்னோட வேலை செய்யிற ஜெயமாலாட்ட கடனா அந்தக்காச வேண்டி உண்ட கணக்கில பாங்கில போட்டிட்டன். காசை எடுத்து பரீட்சை காசைக் கட்டு. நீ படிக்க வேணும் அதுதான் எங்களுங்கு முக்கியம். உன்ன நம்பி இருக்கிற அந்த பொம்பிளப் பிள்ளயள மறந்திடாத”

“ஏன் அம்மா! நான் இங்க யாராவது சிங்களப் பெட்டைய பாத்திடுவன் எண்டு பயந்திட்டீங்களோ?” புன்னைகையுடன் கூறிவிட்டு அம்மா பதில் அளிக்க முன்னரே தொலைபேசி இணைப்பை துண்டித்தேன்.

சில அடி முன்னுக்கு இனோக்கா நின்று கொண்டு இருந்தாள். நான் பேசியது அவளிற்கு விளங்காது காரணம் அவளிற்கு சத்தியமாகத் தமிழ் தெரியாது.

கிட்ட நெருங்கியதும் அதே வழமையான உள்ளம் கொள்ளைகொள்ளும் புன்னகையுடன் கண்களை அகல விரித்து இமைகளை மேலே உயர்த்தி என்ன பதில் என்று கண்களாலே கேட்டாள். அவளிடம் கடும் நம்பிக்கை இருப்பதை அவள் நின்ற நிலை காட்டியது. கொஞ்சமும் படபடப்பில்லாம் நின்ற கொண்டுடிருந்தாள்.

“ஐம் சாரி இனோக்கா”

“வட்?” சில நாழிகைகள் அதிர்ச்சியில் நின்றிருந்தாள். பிறகு கண்களை மெல்ல புறங்கையால் தடவியவாறு அவ்விடத்தில் இருந்து கட கட என நடக்கத் தொடங்கினாள்.

“இனோக்கா....வெய்ட்...!!!” எதையும் கேட்கும் நிலையில் அவள் இப்போ இல்லை.

பின்னே திரும்பிப் பார்த்தேன் ரொமேஸ் தனது தலையை இது உருப்படாத பயல் என்று பொருள்படும் வண்ணம் ஆட்டியவாறு என்னைக் கடந்து டிப்பார்ட்மென்ட்டுக்குள் சென்று கொண்டு இருந்தான்.

யாவும் கற்பனை

12 February 2007

62 : பக் பக் நேர்முகத் தேர்வு (இறுதிப்பாகம்)

பாகம் ஒன்றை வாசிக்க இங்கே சொடுக்குக
கடைசியாக ஒரு முடிவுக்கு வந்து 00 இலிருந்து 99 வரை அனைத்து இலக்கங்களையும் பரீட்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். அவ்வாறே 00, 01, 02, 03 என்று 99 வரை அனைத்து எண்களையும் முயன்று பார்த்தேன். சரியான விடைகிடைக்கவேயில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போய் பக்கத்தில் இருந்த சிங்களப் பெட்டையை வெறுப்பாகப் பார்த்தேன். இவளோட அரட்டை அடிச்சுத்தானே அந்த இலக்கத்தை குளப்பினேன். அவளோ விசயம் புரியாமல் “என்ன?? மயூ?? என்ன செய்யப்போறீங்க??” என்று அக்கறையாக விசாரித்தாள்.

“என்ன செய்வது பையை பிளேடால அறுக்க வேண்டியதுதான்” என்று வியர்வை முகம் எங்கும் வழிய வழியச் சொன்னேன்.

பையைவெட்டுவதற்காக பிளேடை எடுக்கப் போன போதுதான் ஞாபகம் வந்தது பிளேடும் பையினுள்தான் உள்ளதென்பது. சத்தியமாக வாழ்க்கையே வெறுத்து விட்டது.

அதே வேளையில் மற்றய கதிரையில் இருந்த நண்பர்களுக்கு விசயம் கொஞ்சம் மோசமாகப் போய்விட்டது என்பது புரிந்து விட்டது. அவர்களும் பையில் தம்பாட்டுக்கு ஏதேதோ முயன்று பார்த்து சலித்துப் போய் அமர்ந்து விட்டனர். இறைவனை வேண்டிக்கொண்டு இருந்தேன். அப்போது மீண்டும் அந்த சிங்களப் பெட்டை என்ன செய்யப்போறீங்க என்று கேட்டாள்.

இதைத் திறக்க நான் ஜேம்ஸ் பாண்டாகத்தான் மாற வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருந்தபோது எனக்கு ஒரு எண்ணம் வந்தது 07 ஐ ஒருக்கா முயற்சித்துப் பார்ப்போம் என்று. இறைவனைவேண்டியவாறே திறந்த போது என்னே அதிசம் பை திறந்து கொண்டது. எல்லாம் கந்தன் கருணை!!!

வாய் எல்லாம் பல்லாகச் சிரித்துக்கொண்டு எல்லா நண்பர்களையும் பார்த்து, திறந்த விடையத்தை சைகையால் காட்டிச் சிரித்துக்கொண்டு இருந்தேன்.

நான் திறந்து முடித்தபோது சரியாக 1 மணி ஆகிவிட்டிருந்தது. யாரே மூவர் திடீர் என்று ஒரு அறைக்குள் இருந்து வந்து முதலில் முன்னுக்கு இருந்த பொடியனை வரச்சொல்லி கூப்பிட்டார்கள்.

அந்தப் பொடியனின் பட்டப் பெயர் யு.ஜி (UG). அதாவது அளவுக்கதிகமான நேரம் Undergraduate Lab ல் இருந்து இணையத்தைத் துளாவுவான் என்பதால் அந்தச் செல்லப்பெயர். படிப்பில் ஓரளவு கெட்டிக்காரனே!

அவன் உள்ளே சென்று அரைமணி நேரம் ஆனது என்ன செய்கின்றார்கள் என்பதே புரியவில்லை. நாங்கள் எல்லாரும் தலையைப் பிய்த்துக்கொண்டு இருந்தோம். சுமார் 35 நிமிடங்களின் பின்னர் யு.ஜி வெளியே வந்தான். வெளியே வந்தவனை எங்களிடம் வரவிடாமல் வேறேங்கோ அழைத்துச் சென்றார்கள்.

“டேய்...!!!! என்னடா நடக்குது இங்க? இன்டஸ்ரியல் ரெயினிங்குக்கு இது அதிகம்டா” நண்பன் ஒருவன் சலித்துக்கொண்டான்.

சற்று நேரத்தில் ஒரு தலை வெளியே எட்டிப்பார்த்து மஞ்சுளா பிரேமரத்ன... என்று சொல்லியது. அவ்வளவுதான் எனக்குப் பக்கதில் இருந்த சிங்களப் பெட்டை பாய்ந்தடித்துக்கொண்டு நேர்முகத் தேர்வு நடந்த அறையை நோக்கி ஓடினாள்.

அடுத்தது யாரோ என நினைக்கயிலேயே நெஞ்சு படபடத்துக்கொண்டது. அடுத்த அரை மணி நேரத்தின் பின்பு மஞ்சுளாவும் வெளியே வந்தாள். மீண்டும் அதே தலை எட்டிப் பார்த்து டினூஷ டீ சில்வா என்று சொல்லியது. என் நண்பன் டினூஷ அறையை நோக்கி நடந்தான்.

மீதம் இருந்த மூவரும் மஞ்சுளாவை சுற்றி நின்று கேள்விகளால் ஒரு வேள்வி வைக்கத் தொடங்கினோம்.

“என்ன கேட்டாங்கள்? படிப்பு சம்பந்தமாக் கேட்டாங்களா? பொது அறிவு பார்த்தாங்கள்?” தெரிந்த கேள்வி எல்லாம் கேட்டாங்கள்.

அவளும் கேள்விகள் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும், VB .net மற்றும் SQL ல் அதிகம் கேள்விகள் கேட்பதாகவும் கூறினாள். அதைவிட யு.ஜி யை ஒரு செய்முறைப் பரீட்சைக்கு அனுப்பிவிட்டதாகவும் தனக்கு அடுத்து நடக்கவுள்ளதாகவும் கூறினாள். எனக்கோ தலை சுற்றத் தொடங்கியது. இப்போ எதுவும் ஞாபகம் இல்லையே!! ???

கடைசியாக என் சந்தர்ப்பமும் வந்தது. நான் பயத்துடன் நேர்முகத் தேர்வு நடந்த அறையை அடைந்தேன். அங்கே மூவர் இருந்தனர். எல்லாரும் நடுத்தர வயது மதிக்கத் தக்கவர்கள்.

நான் உள்ளே போனதும்...
“Hello Sir! I’m Mayooresan” என்று சொல்லி நடுவில் இருந்தவருடன் கையைக் குலுக்கினேன் அவரும் மற்றயவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். பின்பு என்னை இருக்கச் சொல்லி விட்டு என்னைப் பற்றி அறிமுகம் ஒன்று வழங்குமாறு கேட்னர். நானும் ஒரு அறிமுகத்தை வழங்கினேன். அடுத்து கேள்விக் கணைகள் தொடங்கியது.

1.ரிக்கர்சிவ் பங்சன் ஒன்று எழுதுங்க!!! எனக்கு தலைகால் புரியவில்லை... தந்த காகிதத்தை அவர்களிடமே திருப்பித் தந்து விட்டுக் கூறினேன். Sorry sir I can’t remember this..!!!

அப்போதும் அவர்கள் விடுவதாக இல்லை அப்படியானால் ஒரு பங்கசன் அதுக்கு எழுதுங்க பார்ப்பம். சரி என்று எழுதி முடித்துக் கொடுத்தேன். அதைப் பார்த்து விட்டு அதில் ஒரு நொட்டை சொன்னான் அந்த நெட்டைப் பயல்.

பின்பு VB .net ல் சில கேள்விகள் கேட்டான். Inheritance பொன்ற OOP சம்பந்தமான கேள்விகள் கேட்டான் சில கவிண்டது சில சரியாகச் சொன்னேன். கடைசியாகக் கேட்டார்கள் எனக்கு ஒரு செய்முறை வைக்க வேண்டும் என்று!!!

உடனே நான் தயங்காமல் சொன்னேன் “ஆ... இண்டைக்கு நான் தயார் இல்லை, இன்னுமொரு நாளைக்கு செய்யலாமா?”

“ஓம் கட்டயாமா!” என்று சொன்னார்கள். அத்துடன் இரண்டு நாட்களின் பின் செய்முறைப் பரீட்சைக்கு வருமாறும் கூறினார்கள்.

இரண்டு நாட்கள் கழிந்து எக்சாம் செய்தேன் லைப்ரரி இன்ஃபோமேசன் சிஸ்டம் ஒன்றை முழுதாக 2 மணி நேரத்தில் செய்ய்ச் சொல்லி இருந்தார்கள். அதற்கு UML படங்களும் வேற கீற வேண்டுமாம். நான் அவர்கள் கேட்டதை விட்டு விட்டு எனக்குத் தெரிந்ததை எழுதிவிட்டு வந்தேன்.

சரி எல்லாம் முடிந்து விட்டது இனிமேல் இன்னுமொரு கம்பனி பார்க்க வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். இரண்டு நாட்களின் பின்னர் ஒரு நாள் மாலை பல்கலைக்கழக வாசலினூடு நுழைந்து கொண்டு இருந்தேன். யாரோ என் பின்னால் வந்து தட்டினார்கள்.

“மயூரேசன் உங்களுக்குத் தெரியுமா நீங்க நாளைக்கு கைட்ராமணிக்குப் போகோனும் என்றது” முன்பு கவிட்ட அதே மிஸ் கேட்டா....

“இல்லை மிஸ்.. எனக்குத் தெரியாது?” பரபரக்கக் கூறினேன்.

“எனக்குத் தெரியும் நீர் தொயாது என்று சொல்லுவீர் எண்டு. அதாலதான் கண்டிட்டு ஓடி வந்தனான்” மிஸ் சிரித்தவாறே கூறினார்.

“நீரும் மிஹிசரவும் செலக்ட் ஆகி இருக்கீங்க நாளைக்கு இருவரும் அங்க போகோணும் உங்களோட அவங்க சில விசயங்கள் கதைக்கோணும் என்று விரும்பிறாங்க” என்று முடித்தார்.

எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதொ கடவுள் புண்ணியத்தில் நல்லதாக நடந்து முடிந்துவிட்டது. உலகவர்த்தக மையத்தில் 3 மாதத்திற்கு சுற்றும் வாய்ப்பும் கிடைத்தது....

நன்றி முருகா!!!! எல்லாம் உன் செயல் :)

சில படங்கள்....


நேர்முகத் தேர்விற்காகச் சென்ற நண்பர் குழாம்






காலைவாரிய பையுடன் மயூரேசன்......

அவசரத் தகவல் தந்துதவிய நண்பன் UG (உண்மைப் பெயர் புத்திக)



சும்மா ஒரு முயற்சிதான்!!






8 February 2007

61 : பக்.. பக் நேர்முகத் தேர்வு

அன்று மாலை 6 மணி இருக்கும் என் செல்லிடத் தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்திட்டதற்கு அடையாளமாய்ச் சிணுங்கியது. ஆர்வத்துடன் எடுத்துப் பார்த்தேன். என் நண்பன் எழுதி இருந்தான்.

"டேய்.. நாளைக்கு உனக்கும் இன்டர்வியூடா. ரெடியா? உலக வர்த்தக மையம் 23 ம் மாடியில் இன்டர்வியூ நடைபெறும்".

செய்தியைப் பார்த்ததும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுப்போனது. கடவுளே என்ன சோதனையடா இது??? நான் நேர்முகத் தேர்விற்கு கொஞ்சம் கூடத் தயாரில்லையே?

எமது பல்கலைக்கழகத்தில் 3 மாதம் ஏதாவது ஒரு இடத்தில் மென்பொருள் எழுதுனராகப் பணி புரியவேண்டியது கட்டாயம். அதாவது இரண்டாம் ஆண்டு முடிவில் 3 மாதம் இந்தப் பயிற்சி நடைபெறும். இதற்காக எமது பல்கலைக்கழகம் தம்முடன் ஒப்பந்தம் செய்துள்ள கொம்பனிகளில் ஒன்றை எமக்குப் பரிந்துரைப்பதுடன். எமது சுயவிபரக்கோவையை அந்த நிறுவனத்திற்கு அனுப்பிவைக்கும்.

ஆனால் எனக்கு இன்னமும் இந்தக் கொம்பனி என்றுசொல்லவில்லை. அப்பிடி இருக்க என் நண்பன் அனுப்பிய செய்தி ஏன் என்று புரியவில்லையே, தலையைப் பிய்த்துக்கொண்டு அடுத்தநாள் பல்கலைக்கழகத்திற்கு ஓடினேன்.

பல்கலைக்கழகத்தில் Industrial Training க்குப் பொறுப்பான விரிவுரையாளரிடம் சென்றேன்.
"மிஸ்.. அ... எனக்கு இண்டைக்கு இன்டர்வியூவா?"

"ஓம்... உமக்குத் தெரியாதா? நான் அண்டைக்கே சொன்னனான்தானே?" மிஸ் எரிந்து விழுந்தார்.

"இல்லை.. மிஸ் நீங்க எனக்குச் சொல்லேல" நான் மறுத்தேன்.

"தம்பி... நான் சொன்னனான் சரியா?... சரி இப்ப என்ன வெளிக்கிட்டுக்கொண்டுடு இனடர்வியூவிற்குப் போம். 1 மணிக்குத் தானே இனடர்வியூ இப்ப வெளிக்கிட்டீர் என்டா நேரம் சரியா இருக்கும்" அவர் அலட்சியமாகச் சொல்லிவிட்டு போய்விட்டார்.

விரிவுரையாளரின் அறையை விட்டு வெளியே வந்த எனக்கு தலைகால் புரியாமல் கோவம் கொவமாக வந்தது. ஏதாவது சாமான் கையில கிடைச்சால் அந்த மிஸ்சை ஒரு அடி அடிச்சு விடலாமோ என்று தோன்றியது.

சரி.. இனி நடப்பதைப் பார்ப்போம் என்று தீர்மானித்தவாறே வீடு திரும்பினேன். அவசரம் அவசரமாக என் உடுப்புகளை இஸ்திரி போட்டுக்கொண்டேன். வழைமைபோல என்னுடைய விருப்பமான நிறமான நீல நிறத்தில் காற்சட்டை, சேட், டை என்பவற்றை அணிந்து கொண்டு பஸ் நிலையத்திற்குச் சென்றேன்.

மீண்டும் என் செல்லிடத் தொல்லைபேசி சிணுக்கத் தொடங்கியது. எவண்டா இவன் இந்த நேரத்தில கழுத்தறுக்கிறான்.. சினந்தவாறே சி.எல்.ஐ பார்த்தேன். முன்பு குறுஞ்செய்தி அனுப்பி என்னை உசார்ப்படுத்திய அதே நண்பன்.

"டேய் நண்பா.. மிஸ் கவுத்துட்டாள்டா.. என்னையும் இன்டர்வியூக்குப் போகச் சொல்லிட்டாள்டா" சோகமாக நண்பனிடம் கூறினேன்.

"யோசிக்காத மச்சான். எல்லாம சேப்பா முடியும், நாங்க மொத்தம் 6 பேர் அந்த கம்பனிக்குப் போகப்போறம். நாங்க எல்லாரும் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் முன்னால சந்திக்கிறதா இருக்கிறம். நீயும் அங்க வாறிய இல்ல நேர WTC க்குப் போறியா?"

"நான் உங்களோட வாறன் மச்சான். இன்னும் 10 நிமிசத்தில நான் இரயில் நிலையத்திற்கு வாறன்" நான் சொன்னேன்.

கடைசியாக 168 பஸ் எடுத்துச் சென்று மல்வத்த வீதியில் இறங்கி இரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். அதற்கிடையில் அவன் எப்பிடியும் சுமார் 6-7 மிஸ் கோல் போட்டுவிட்டான்.

கடைசியாக நான் இரயில் நிலையத்தை அடைந்த போது மொத்தம் ஐந்து பேர் நின்றிருந்தார்கள். எல்லாரும் நல்லாத் தயாராக இருக்கின்றார்கள் என்பது அவர்களைப் பார்த்ததுமே புரிந்தது.

நாங்கள் ஆறு பேர் இன்டர்வியூவிற்குப் போறதாக இருந்தம் அதில் நான் மட்டுமே தமிழ் மற்றவர்கள் அனைவரும் சிங்கள நண்பர்கள். உலக வர்த்தக மையம் அதிக பாதுகாப்பான பிரதேசம். அங்கே இப்படியாக சிங்கள நண்பர்களுடன் செல்வதென்றால் பிரைச்சனை இல்லை.

அன்றுதான் முதல் தடவையாக உலக வர்த்தக மையத்தினுள் சென்றேன். சும்மா சொல்லக் கூடாது மிகவும் அழகாகத்தான்இருந்தது. வெளிநாடு ஒன்றில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. நண்பர்களுடன் ஒருமாதிரி லிப்ட் இருக்கும் இடத்தை அறிந்து அதில் ஏறி 23 ம் மாடியை அடைந்து விட்டோம்.

லிப்ட் திறந்ததும் பெரிதாகத் தெரிந்தது Hydramani என்ற கம்பனியின் பெயரும் முன்னுக்கு இருந்த அழகான வரேப்பாளர் பெண்மணியும்தான்.

இப்போ இவனுகளுக்குள் ஒரே அடிபிடி யார் போய் ரிசப்சனிஸ்டிடம் கதைப்பது என்று. கடைசியாக எனக்கு அந்தப் பாக்கியத்தைத் தந்தார்கள்.

"We are from University of kelaniya.. We'd like to meet Mr. Mangala regarding our Industrial Training.." நான் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர் சொன்னார் நாங்கள் வருவோம் என்பது முன்பே தெரியும் என்றும் அந்த விருந்தினர் இருக்கையில் இருங்கள் என்றும் கூறினார்.

நெஞ்சு பட பட என்று அடிக்கத்தொடங்கியது. நேர்முகத் தேர்வில் என்ன கேள்வி கேட்பானுகளோ தெரியாதெ??? நண்பர்கள் வலு கூலாக இருந்தார்கள். நான் என்பாட்டுக்கு எனக்குள் புலம்பிக்கொண்டு இருந்தேன்.

இதே வேளையில் நான் என் சுயவிபரக்கோவை, மற்றும் சர்ட்டிபிகேட்டுகளை ஒரு பையினுள் இட்டு கொண்டு வந்திருந்தேன். அந்தப் பையிற்கு ஒரு இரகசியத் திறவுச் சொல்லும் இருந்தது. நாம் கடைசியாகப் பூட்டும் போது என்ன இலக்கம் இருக்குதோ அதுதான் அடுத்ததரம் திறக்கும் போது திறவுச் சொல்லாகப் பயன்படும்.

எனக்குப் பக்கத்தில் எங்களுடன் நேர்முகத் தேர்விற்கு வந்த எங்களுடைய பல்கலைக்கழக சக மாணவி இருந்தாள். அவளுடன் கதைத்தவாறே எனது பையின் லொக்கைத் திறந்து மூடி திறந்து மூடிக்கொண்டு இருந்தேன். திடீர் என்று லொக் திறக்க மறுத்தது.

இன்னும் 15 நிமிடத்தில் நேர்முகத் தேர்வு ஆரம்பிக்கப் போகின்றது. இந்த நேரத்தில் இந்தப் பை இப்படி சிக்கிக்கொண்டது. பையைத் திறக்காவிட்டால் என் CV, Certificates எதையும் எடுக்க முடியாது.

நெஞ்சு முன்பு எப்போதும் இல்லாத வாறு பட ... பட என்று அடித்துக்கொண்டது. கடுமையான ஏ.சிக்குள்ளும் வியர்க்கத் தொடங்கியது.

நான் பதட்டப் படுவதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட சிங்களப் பெட்டை." மயூரேசன்.. ஒவ்வொரு நம்பரா ரை பண்ணுங்க.. இன்னும் நேரம் இருக்குதுதானே?" என்று சொன்னாள்.

நானும் ஒவ்வொறு எனக்குத் தெரிந்த இலக்கங்களை ஒவ்வொன்றாகப் போட்டுப் பார்த்துக்கொண்டு இருந்தேன். வேலையில்லை பை திறக்க மாட்டேன் என்று அடம் பிடித்தது.

(தொடரும்.. அடுத்த பாகத்துடன் முடியும்.)

3 February 2007

60 : ஜூலை மாதத்தில் கடைசி ஹரிபோட்டர் புத்தகம்


























"Harry Potter and the Deathly Hallows," என்ற கடைசிப் புத்தகத்துடன் ரெளவ்லிங்கின் பிரபலமான ஹரிபோட்டர் கதை முடிவிற்கு வருகின்றது. இந்த கடைசிக் கதைப்புத்தகம் ஜூலை 21 ல் வெளிவரும் என எழுத்தாளர் ரெளலிங் தெரிவத்தார்.

இத்தகவலை ரெளலிங் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் வெளியீட்டாளரான புளூம்பரி நிறுவனம் கருத்துத் தெரிவிக்கைளில் இவர்கள் சிறுவருக்கான பதிப்பு, வயது வந்தவருக்கான பதிப்பு மற்றும் ஒலிபுத்தகம் என்பவற்றை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க வெளியீட்டாளர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தப் புத்தம் $34.99 விலைக்குக் கிடைக்கும் என்று கூறினார். டிலுக்ஸ் பதிப்பு 65 அமெரிக்க டாலருக்கும்.. ஹார்ட் பக் லைப்ரரிப் பதிப்பு 39.99 அமெரிக்க டாலருக்கு கிடைக்கும் என்றும் கூறினார்.

முதலாவது பாகம் வெளியிட்டு இன்றுடன் 10 வருடங்கள் முடிவடைவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது 325 மில்லியன் வரை பொட்டர் புத்தகங்கள் விற்றுத் தீர்த்துள்ளன. இது 64 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது (சிங்களம் உட்பட).

கடைசியாக வெளிவந்த புத்தகமான “Harry Potter and the Half-Blood Princes,” என்ன புத்தகம் பிருத்தானியாவில் மட்டும் 2 009 574 பிரதிகள் விற்றுத் தீர்த்துள்ளன.

புத்தகம் வெளிவரும் விடையம் லண்டன் பங்குச் சந்தைக்கு அறிவிக்கப்பட்டுள்னது என்றால் பாருங்கள் பொருளாதாரத்தில் செல்வாக்குச் செலுத்துமளவிற்கு இது வளர்ந்துள்ளது.

மேலும் தகவல்களுக்குப் எழுத்தாளரின் தளத்தைப் பார்க்க....