8 May 2007

சென்று வருகின்றேன் பிளாக்கரே!!!

வலைப்பதிவர் கவனத்திற்கு....
இத்தால் நான் அறியத் தருவது என்னவெனில் இந்த பிளாக்கருக்கு பாய் பாய் சொல்லிவிட்டு என் புது டொமைனில் வலைப்பதிவு கட்டிக்கொண்டு போய் விட்டேன் என்பதே!!! ஆகவே இங்கு மாறி நீங்கள் வந்திருந்தால் புதிய வீட்டுக்கு வந்து என்னைச் சந்தியுங்கள்!!!!!

http://mayuonline.com/


தமிழ் வலைப்பதிவு


English Blog

சென்று வருகின்றேன் பிளாக்கரே!!!

வலைப்பதிவர் கவனத்திற்கு....
இத்தால் நான் அறியத் தருவது என்னவெனில் இந்த பிளாக்கருக்கு பாய் பாய் சொல்லிவிட்டு என் புது டொமைனில் வலைப்பதிவு கட்டிக்கொண்டு போய் விட்டேன் என்பதே!!! ஆகவே இங்கு மாறி நீங்கள் வந்திருந்தால் புதிய வீட்டுக்கு வந்து என்னைச் சந்தியுங்கள்!!!!!

http://blog.mayuonline.com

24 April 2007

72 : பெரு மூச்சு விடுகின்றேன்!!



பேச மனம் துடிக்கும்...
கடைக் கண் பார்வைக்கு
மனம் ஏங்கும்!

ஏளனச் சிரிப்பைக் கூட
எனக்காக உதிர்த்தாளோ என
எண்ணத் தோன்றும்!!

நண்பியுடன் பேசத் திரும்பினால்
என்னைப் பார்க்கத்
திரும்பியதாகத் தோன்றும்

கடந்து செல்கையில்
மல்லிகைப மலர்கள்
கடந்து சென்றதாகத் தோன்றும்

உன் நீல விழி பார்க்கையில்
நீல வானம் உனக்கு
மண்டியிட்டதாகத் தோன்றும்

அவள் சுட்டு விரல்
உயர்த்துவதைப் பார்க்கையில்
சுக்கிரன் கூட
பணிந்துவிட்டதாகத் தோன்றும்

என்னவளின் வேல் விழிகளில்
கோடி மின்னல் காண்பேன்
அந்த மின்னல் வந்து
இதயத்தைத் தாக்குவதையும்
வெண் மேகம் போல இரசிப்பேன்

அவள் நடந்து வரும் பாணியில்
அன்னத்தைக் காண்பேன்,

நீ யாருடனோ சிரித்து பேசும் போது
நானும் என்னுள்ளே சிரித்துக்கொள்வேன்

பேசும் போது புரியாது
ஆனால் சரி சரி என்று தலையாட்டுவேன்

ஒரு ஓரப் பார்வைக்காக
நாள் முழுதும் அலைவேன்
நாள் முடிந்த பி்ன்பும்
உன் நினைவில் கனவில் அலைவேன்

கண்ணாடி முன் நின்று
உன் கூடப் பல கதை பேசுவேன்

நீ நடந்த இடத்தில்
உன் காலடித் தடம் தேடுவேன்
முடியாவிட்டால் காற்றலையில்
முகர்ந்து திரிவேன்
அப்படியாவது உன் வாசனையை
நுகர முடியுமல்லவா?

ஒரு நாளாவது உன் அருகில்
இருக்க சந்தர்ப்பம் தேடுவேன்
சந்தர்ப்பம் வாய்த்ததும்
சங்கடத்துடன் விலகிச்செல்வேன்

நான் என்ன பைத்தியமா?
இல்லை என்னை புரியாத
நீ பைத்தியமா?
நான்தான் முட்டாள்
என்றும் உண்மை
என்று ஒன்று இருக்கின்றது

நான் ஒரு சூழ்நிலைக் கைதி
விதியின் கிறுக்கல் கையெழுத்து
பாலைவனத்தில் பறக்கும் ஒற்றைப் பறவை
நடுக்கடலின் மணல் திட்டு

அனைத்தும் நிசத்தில் நிழல்
என்பது உறைத்ததும்
கரும் புகையாய்
காற்று வெளியில் கலந்துவிடுவேன்

மறுமுறை உன்னைக் கண்டதும்
அனைத்தும் மறந்து
நினைவு இழந்து
மீண்டும் கனவு காண்பேன்
நான் அடிப்படையில்
சாதாரண இளைஞன்தானே?

16 April 2007

71 : நாடு நல்ல நாடு (தொடர்வினை - Meme)

நாடு நல்ல நாடு என்ற தொடர்வினையில் அண்மையில் திரு.ரவி அவர்கள் என்னை அழைத்து இருந்தார். தமிழ் வலைப்பதிவு உலகம் தடம் மாறிச் செல்கின்றதோ என்று அனைவரும் கலங்கும் நேரத்தில் ரவி போன்ற அன்பர்கள் அதைப் பொய்ப்பித்து வருகின்றனர். அவர் அழைப்பை ஏற்று நான் இலங்கை பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இலங்கையில் இனப் பிரச்சனை போன்ற கசப்பான விடையங்களை இங்கே தவிர்த்து விடுவதாக முடிவெடுத்துள்ளேன். அது பற்றி பல பதிவுகள் இணையம் முழுவதும் இறைந்து கிடப்பதால் இந்தப் பதிவில் அது பற்றிய விடயங்களை நான் அவ்வளவாகத் தொடப்போவதில்லை. மேலும் இங்குள்ள விடயங்கள் பல கலைக்களஞ்சியத்தில் இல்லாத சுவையான தகவல்களாக இருக்கும் என்று நம்புகின்றேன். சரி இனிப் பதிவிற்குப் போவோம்!!!!

இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்று பலராலும் அறியப்பட்ட அழகிய நாடாகும். இலங்கை என்று தமிழில் வழங்கப்ட்டாலும் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் நாட்டின் பெயர் ஸ்ரீ லங்கா என்று வழங்கப்படுகின்றது. இதன் அர்த்தம் சுபீட்சமான எதிர்காலம் என்பதாகும். ஆயினும் இவ்வாறு பெயர் மாற்றிய காலத்தில் இருந்து நாட்டின் எதிர்காலம் மிகவும் மோசமாகிப் போனது.

இந்த நாட்டின் தலைநகரமாக கொழும்பு திகழ்கின்றது. அத்துடன் கொழும்பு மாநகரே நாட்டின் பெரிய நகரமாகவும் வர்த்தகத் தலை நகரமாகவும் திகழ்கின்றது. கொழும்பு நகரம் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கொழும்பு 6 (வெள்ளவத்தை) மற்றும் கொழும்பு 13 (கொட்டாஞ்சேனை) ஆகிய இரு பகுதிகளிலும் தமிழர்களே அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கொழும்பு நகரின் பெரும்பாண்மையான மக்கள் தமிழ் மொழி பேசுவோர் என்பதும், தற்போதைய உப மேயர் தமிழர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இலங்கையின் தேசிய கீதம் சிங்களத்தில் இருந்தாலும் தமிழிலும் அதன் மொழி பெயர்ப்பு இருக்கின்றது. அத்துடன் தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக அரச வைபவங்களில் பெரும்பாலும் தமிழிலேயே தேசிய கீதம் இசைக்கப்படும். நான் அறிந்த வரை இலங்கையில் மட்டுமே இரண்டு மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. உங்களுக்குத் தெரிந்த வேறு நாடு இருந்தால் இங்கே பின்னூட்டமாக இட்டுச் செல்லுங்கள்.

இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதி எனும் போது நாட்டின் வடக்கு - கிழக்குப் பகுதி, மத்திய மலைநாட்டுப்பகுதி, கொழும்பு மற்றும் அதை அண்டிய புறநகர்ப் பகுதி என்பனவே. இதில் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தமிழர் அறுதிப் பெரும்பாண்மையினராக வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியையே இவர்கள் தமிழீழ மாநிலமாக்குமாறு வேண்டி வருகின்றனர். மத்திய மலை நாட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் தமிழர்கள் சில நூற்றாண்டு காலத்திற்கு முன்னர் ஆங்கிலேயரால் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்து வரப்பட்ட மக்களாவர், இன்று இவர்கள் நாடு முழுவதும் வாழ்ந்து வருகின்றனர். ஆயினும் தற்போதும் தோட்டங்களில் பெரும்பாலானாவர்கள் அடிப்படை வசதி இன்றி அல்லல் பட்டே தமது வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

இலங்கை என்றால் அனைவரது எண்ணத்திலும் வருவது இலங்கைத் தேயிலை. இலங்கையின் மத்திய மலைநாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. சில ஆண்டுகள் முன்பு வரை தேயிலையே நாட்டுக்கு அதிகூடிய வருமானத்தை ஈட்டித் தரும் துறையாக இருந்தது. ஆயினும் தற்போது தைத்த ஆடைகள் பெருமளது லாபத்தை ஈட்டித்தருகின்றது.

நாட்டில் இரண்டு பிரதான இயற்கைத் துறைமுகங்கள் உள்ளன. முதலாவது காலி துறைமுகம். இது தென் மாகாணத்தின் தலைநகரில் அமைந்துள்ளது. இரண்டாவது திருகோணமலை துறைமுகம். இது முன்பு இணைந்து இருந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தின் தலைநகரில் உள்ளது. இந்த துறைமுகம் வலையத்தில் ஒரு பெரிய மற்றும், பாதுகாப்பான துறைமுகமாக இருந்து வருகின்றது. இதனால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தத் துறைமுகத்தில் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயல்கின்றன. சிங்கப்பூர் ஜப்பானியரிடம் வீழ்ந்த பின்பு இந்தத் துறைமுகமே றோயல் நேவியின் பிராந்தியத் தலமையகமாகச் செயற்பட்டது.

இயற்கை அழகிற்கு இலங்கை பெயர் போனது. அழகிய மலைகள் நிறைந்த மத்திய பகுதியும், மணற் கடற்கரை நிறைந்த கிழக்கு, தெற்குப் பகுதிகள் சுற்றுலாத்துறைக்கு உயிரூட்டுகின்றன. நாட்டின் தற்போதைய யுத்த சூழ்நிலையிலும் பல உல்லாசப் பயனிகள் நாடடைச் சுற்றிப் பார்க்க வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் 100 வீதம் இலவசமாகும். ஒருவர் ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை அரச செலவில் கற்பிக்கப்படுகின்றார். அத்துடன் குறைந் வருமானம் உடைய பல்கலைக்கழக மாணவர்களின் பணத் தேவைக்கா 2500 ரூபா உதவிப்பணமும் வழங்கப்படுகின்றது. அத்துடன் நாடெங்கிலும் உள்ள அரச வைத்திய சாலைகளில் மருத்துவம் முற்றிலும் இலவசமாகும். ஆயினும் இவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக மேற்தட்டு வர்க்கத்தினர் தனியார் பாடசாலைகள், மருத்துவ மனை என்பவற்றை நாடுகின்றனர். ஆயினும் இதுவரை தனியார் கல்லூரிகள் அமைப்பதற்கு இலங்கையில் தடை நிலவிவருகின்றது.

நாட்டில் வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் பெரும்பாண்மையானவர்கள் தமிழைப் பேசக் கூடியவராகவோ அல்லது தாய்மொழியாகக் கொண்டவராகவோ காணப்படுகின்றனர் ஆயினும் இவர்கள் தமிழர்கள் என்று வகைப்படுத்தப்படுவதில்லை. நாட்டில் முஸ்லீம்கள் தனி ஒரு இனமாக கணிக்கப்பட்டு வருகின்றனர்.

நாட்டில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. நாட்டிற்குள் வரவேண்டுமானால் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாகவே வரவேண்டிய தேவை உள்ளது. அத்துடன் வர்த்த நடவடிக்கைகளுக்காக கொழும்புத் துறைமுகமே பயன்படுகின்றது.

சரி இனி மெமெ கொள்கையின் படி யாரையாவது நான் அழைக்க வேண்டும். யாரை நான் அழைப்பது என்றே புரியவில்லை!!!!. எது எவ்வாறாயினும் ரவி அவர்களின் வேண்டுகோளினை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கின்றேன்.

நீங்கள் உங்கள் நாடு பற்றி எழுத விரும்பினால் பின்னூட்டத்தில் தெரிவித்து விட்டு எழுதுங்கள்...!!!!

9 April 2007

70 : ஹரி பொட்டர் அன் த ஹாவ் பிளட் பிரின்ஸ் - விமர்சனம்


மயூரேசனின் பதிவா??? ஐயோ ஹரியைப் பற்றி ஏதாவது எழுதித் தொலைத்திருக்கப் போகின்றான் என்று நீங்கள் முணு முணுப்பது எனக்குக் கேட்கின்றது. ஆயினும் என்ன செய்ய வாசித்து முடித் புத்தகத்திற்கு ஒரு விமர்சனம் போட வேண்டாமா?

The Harry Potter and the Half Blood Prince ஹரி பொட்டர் தொடரில் கடைசியாக வந்ததும், ஒப்பீட்டளவில் கொஞ்சம் அலட்டல் நிறைந்த புத்தகமும் கூட. புத்தகத்தின் முதல் அரைப் பகுதி வெறுமனே சம்பவங்களைக் கோர்த்துக் கோர்த்து நகர்த்தப் படுகின்றது. வழமை போல கடைசி 200 பக்கங்களில் பொறி பறக்கின்றது. பக்கங்களைப் புரட்டும் போது கையும் புத்தகத்தின் பக்கமும் உரசிப் பொறி பறக்கும்மளவிற்கு வேகமாக பக்கங்களைத் திருப்பித் திருப்பிப் படித்தேன்.

கதையின் ஆரம்பம் பிருத்தானிய பிரதமரைக் காட்டுவதுடன் தொடங்குகின்றது. அதாவது மகிள்ஸ்சின் (மந்திரம் தெரியாத சாதாரண மக்கள்) பிரதமருக்கு மந்திர தந்திர அமைச்சு எவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டது. அவருடன் தொடர்பு கொள்ளும் முறை பற்றிக் கூறுகின்றனர். நாட்டில் பல பிரதேசங்களில் இயற்கை அழிவுகள் நடைபெறுகின்றன. இதை இயற்கை அழிவில்லை டெத் ஈட்டர்ஸ் (பிணத் தின்னிகள் என்று சொல்லலாம், வால்டமோட்டின் படையணி) நடத்திய முடித்த நாசகார வேலை என்று சொல்கின்றனர். விரைவில் அனைத்தும் தீர்க்க முயற்சிப்பதாகவும் மந்திர தந்திர அமைச்சு தெரிவிக்கின்றது. இதே வேளை பழைய மந்திர தந்திர அமைச்சர் நீக்கப்பட்டு புதிய அமைச்சர் பதவி ஏற்கின்றார்.

வழமையாக வித்தியாசமான முறையில் டட்லி வீட்டில் இருந்து வெளியேறும் ஹரியை இம்முறை டம்பிள்டோர் நேரடியாக வந்து அழைத்துச் செல்கின்றார். அத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும் வரை டட்லி வீட்டில் அவனுக்கு இடம் வழங்க வேண்டும் என்று மிரட்டாத குறையாகச் சொல்லி விட்டுச் செல்கின்றார். மந்திர உலகில் 17 வயதானதும் வயது வந்தவராகக் கணிக்கப்படுகின்றனர். ஆகவே அடுத்த வருடத்துடன் ஹரியிற்கு 17 வயதாகும். எனவே இந்த முறையும் பாடசாலை முடிந்ததும் டம்பிள்டோரின் வேண்டுதலின் படி மீண்டும் டட்லி வீட்டிற்கு செல்ல வேண்டிய தேவை ஹரியிற்கு இருக்கின்றது.

ஹரியை அழைத்துச் செல்லும் டம்பிள்டோர் அவனை பரோவிற்கு (வீஸ்லி குடும்பத்தின் வீடு) அழைத்துச் செல்ல முன்பு வேறு இடத்திற்கு அழைத்துச் செல்கின்றார். ஹாக்வாட்சில் இப்போது ஒரு ஆசிரியர் தேவைப்படுவது நீங்கள் அறிந்ததே. அதாவது தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பித்த உம்பிரிச் இப்போது பாடசாலையில் இல்லாததால் புதிய ஆசிரியரை நியமிக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அதனால் டம்பிள்டோர் புதிய ஆசிரியரைத் தேடி ஹரியுடன் செல்கின்றார். அந்தப் புதிய ஆசிரியர் பாடசாலைக்குத் திரும்ப ஹரியே முழுமுதற் காரணமாக அமைகின்றான்.

பின்பு வீஸ்லி குடும்பத்தின் வீடு செல்லும் ஹரி அங்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் Fலோர் டெலகோர் (Tri Wizard championship - ரை விசார்ட் சம்பியன்சிப்பில் வந்த பெண்) பில்லை காதலிப்பதாகவும் விரைவில் மணம் முடிக்க இருப்பதாகவும் அறிகின்றார். இதே வேளை fலோர் இல் அவ்வளவாக நாட்டம் இல்லாத திருமதி வீஸ்லி டாங்ஸ்சை தன் பையன் பில்லுடன் சேர்த்துவைக்க விரும்புகின்றார். எது எதுவாயினும் அனைவரும் விரும்புவது நடப்பதில்லையே!! இதே வேளை பிரட்டும், ஜோர்ஜ்ஜூம் டயகன் அலியில் ஒரு கடை போட்டு நல்ல வருமானம் ஈட்டுகின்றார்கள். இம்முறை கதையில் இவர்களின் பங்கு மிகக் குறைவு. இவர்களின் குறும்புகளைப் பாடசாலை மிஸ் பண்ணுகின்றது என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பு : நீங்கள் Harry Potter and the Order of Phoenix திரைப்படம் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்காதீர்கள். அந்தக் கதையின் சில முடிவுகளை இங்கே குறிப்பிடுவது அவசியமாகும்.

டாங்ஸ் வேறு ஒருவர் மேல் காதல் கொண்டிருப்பதை ஹரி தெரிந்துகொள்கின்றான். அது சிரியஸ் பிளக்காக இருக்குமோ என்று ஹரி சந்தேகப் படுகின்றான். ஆயினும் கதையின் இறுதியிலேயே அது யார் என்று தெரியவருகின்றது.

சிரியஸ் பிளாக்கின் (ஹரியின் காட் fபாதர்) மரணம் ஹரியின் மனதில் தொடர்ந்தும் துன்ப அலைகளைத் தோற்றுவித்தவாறே இருக்கின்றது. இதற்கு மத்தியில் ஆச்சரியத்திற்கு ஏணி வைத்தாற் போல புதிய ஆசிரியரான ஸ்லொக்கன் மந்திரக் கசாயம் காய்ச்சும் பாடத்திற்கு அமர்த்தப்படுகின்றார். அப்போ தீய சக்திகளுக்கு எதிரான கலையைக் கற்பிக்கப் போவது யார்??? ஸ்னேப் அந்தப் பதவியைப் பெற்றுள்ளார் என்பதை அறிந்ததும் ஹரியின் உள்ளம் கொதிக்கின்றது.

மந்திரக் கசாயம் காய்ச்சும் வகுப்பில் ஹரியிற்கு புதிய புத்தகம் ஒன்று இல்லாததால், பழைய புத்தகம் ஒன்றை ஆசரியர் ஸ்லோகனிடம் வாங்கி படிக்கின்றான். அந்தப் புத்தகம் தன்னை ஹாஃப் பிளட் பிரின்ஸ் (The Half Blood Prince) என அடையாளப்படுத்திக் கொண்டவரின் புத்தகமாகும். அந்த ஹாவ் பிளட் பிரின்சின் உதவியுடன் ஹரி பல்வேறு கசாயங்களை மிக இலகுவாகக் காய்ச்சி விடுகின்றான். வழமை பேல ஹர்மானிக்கு அந்தப் புத்தகத்தின் மேல் கடும் வெறுப்பு. குறுக்கு வழியில் இவ்வாறு செய்வது ஆபத்து என்றும், அந்தப் புத்தகத்தை எவ்வாறு நம்புவது என்றும் ஹர்மானி அடிக்கடி ஹரியை நச்சரித்தாலும் ஹரி மசியவில்லை. கதையில் கடைசி நிமிடங்களிலேயே யார் அந்த ஹாஃப் பிளட் பரின்ஸ் என்பது தெரியவருகின்றது.
இதே வேளை ஸ்னேப் பற்றி ஒரு தெளிவின்மை கதைகளில் தொடர்ந்து வருகின்றது. அவர் வால்டமோட் பக்கமா இல்லை டம்பிள்டோர் பக்கமா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. ஆயினும் இந்தக் கதை தொடக்கத்தில் அந்தப் பிரச்சனை தெளிவாக்கப்படுகின்றது. ஸ்னேப் எப்படிப்பட்ட நபர் என்பதை நீங்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள் (அல்லது 2008 வரை பொறுத்திருங்கள் திரைப்படம் வரும்வரை).

மால்ஃபோய் இந்தக் கதையில் முழு டெத் ஈட்டராக வடிவம் கொள்கின்றான். மல்ஃபோயின் மேல் சந்தேகம் கொள்ளும் ஹரி அவனைத் தொடர்ந்து கவனித்தாலும் அவனை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கின்றது. ரூம் ஆப் ரிக்குயார்மென்ட் (Room of requirement) இல் ஏதோ கள்ள வேலை செய்யும் மால்ஃபோயை உள்சென்று ஹரியால் மடக்க முடியாமல் இருக்கின்றது. இந்த அறையையே முன்பு ஹரி டம்பிள்டோர் ஆமி என்ற குழுவைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்தினார்.

கதையின் முக்கியமான விடையம் டம்பிள்டோருடனான ஹரியின் வகுப்புகள். டம்பிள்டோர் தான் அறிந்த, அதாவது தனது வால்டமோட்டுடனான சந்திப்பு, வால்டமோட்டின் வாழ்க்கையில் நடந்த சில நினைவுகள் என்பவற்றை பென்சீவின் (நினைவுகளைச் சேமித்து வைக்க உதவும் பேளை) உதவியுடன் காட்டுகின்றார். இதன் மூலம் அவர் ஹரியை இறுதி யுத்தத்திற்குத் தயார் படுத்துகின்றார்.

இந்தப் பாடங்களின் மூலம் வால்டமேர்ட் தனது உயிரை ஏழு இடங்களில் வெவ்வேறு பொருட்களில் மறைத்து வைத்துள்ளதாக நினைக்கின்றனர். அதில் ஒன்று ஏற்கனவே ஹரியினால் அழிக்கப்பட் டயரியாகும். அதாவது அந்த டயரியே சேம்பர் ஒவ் சீக்ரட்டைத் திறந்து அந்தப் பாம்பை வெளியே வர வைத்தது(2ம் பாகம்). மற்றய ஒன்றை டம்பிள்டோர் அழித்திருந்தார். இன்னுமொன்று இப்போது இருக்கும் வால்டமோட்டின் உடலில் உள்ளது. இந்த உயிர் ஸ்தானங்கள் அனைத்தையும் அழித்தால் அன்றி வால்டமோட்டை அழிக்க முடியாது என்று அறிந்து கொள்கின்றனர். இந்த உயிர் ஸ்தானங்கள் ஹோகிரக்சஸ் (Horcruxes) என்று அழைக்கப்பட்டது.

இப்படிக் கதை சீரியசாகச் சென்றுகொண்டு இருக்கும் போது இடையில் நமது நண்பர்களான ரொண், ஹர்மாணி, ஹரி போன்றோரின் காதல் லீலைகளும் அரங்கேறுகின்றது. ரொண், ஹர்மாணி ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பெரும்பாலும் சண்டை இட்டுக்கொண்டனர். இது போதாதென்று ஹர்மானியை கோவப்படுத்த அந்த இந்தியப் பெண்ணான லவந்தருடன் சேரும் ரொண் பின்னர் லவந்தரிடம் இருந்து கழற்றுப்பட படும் பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது.

ஹரியின் முன்னய காதலி சோவுடனான காதல் முறிவடைந்ததைத் தொடர்ந்து இப்போது இவருக்கு ஒன்றும் இல்லாமல் தனிமரமாகத்தான் இருக்கின்றார். ஆயினும் இப்போது ஹரி தான் காதலிப்பது தன் உற்ற நண்பனின் தங்கை என்பதை அறிந்து காதலைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் குற்ற உணர்வுகளுடன் அவஸ்தைப்படுகின்றார். இவர்களின் காதல் என்னாச்சு... ஜின்னி ஹரியைக் காதலித்தாரா என்பதை எல்லாம் புத்தகத்தில் வாசித்து அறிந்துகொள்ளுங்கள். கண்ணெதிரே தோன்றினாள் படத்தை ரெளலிங் பார்த்தாரோ தெரியாது!!!

கடைசியாக டம்பிள்டோருடன் ஹரி ஒரு Horcruxes ஐத் தேடி ஒரு குகைக்குச் செல்கின்றனர். இங்கேயே எல்லாம் தலைகீழாக மாறுகின்றது. அந்தக் குகையில் நடக்கும் நிகழ்ச்சிகள்பற்றிச் சொல்லி மாளாது. அத்தனை பரபரப்பு.. விறுவிறுப்பு.. வாசித்தால்தான் தெரியும் அந்த அனுபவம்.

கிளைமாக்ஸ் ஹாக்வாட்ஸ் பாடசாலையில் நடக்கின்றது. முந்திய பாகத்தில் மந்திர தந்திர அமைச்சிலேயே கிளைமாக்ஸ் ஆனால் இம்முறை பாடசாலையினுள்ளேயே டெத் ஈட்டர்ஸ் நுழைந்துவிடுகின்றனர். கடும் சண்டை மூள்கின்றது. பாடசாலை ஆசரியர்கள், ஆடர் ஆப் பீனிக்ஸ்சைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஹரியினால் பயிற்றுவிக்கப்பட்ட DA (Dambledore’s Army) டம்பிள்டோர் ஆமியும் களத்தில் இறங்கி போராடுகின்றது. மயிர்கூச்செறியும் யுத்தம். ரொண், ஹர்மானி, லூனா, நெவில், ஜின்னி, மற்றும் பலர் களத்தில் போராடுகின்றனர். போராட்டம் என்றால் நிச்சயம் இழப்புக்கள் இருக்கும் அல்லவா!!! இங்கும் அவாடா கெடாவ்ரா (மரணத்தை விளைவிக்கும் மந்திரம்) பாவிக்கப்படுகின்றது. யாரால் யார் மேல் என்பதுதான் நீங்கள் வாசித்து அறிய வேண்டும்.

கடந்த பாகத்தில் சிரியஸ் பிளாக்கைக் முடித்து வைத்த ரெளலிங் இந்தப் பாகத்தில் இன்னும் ஒரு மிக மிக மிக மிக மிக மிக மிக மிக.............மிக..... முக்கியமான ஒரு பாத்திரத்தை முடித்துவிடுகின்றார். வர வர ரெளலிங் இப்படி கல்நெஞ்சக்காரியாகி வருவது நெஞ்சை உலுக்குகி்ன்றது. அடுத்த பாகத்தில் என்ன நடக்கும் என்று சொல்வதற்கில்லை.

ஆகமொத்தத்தில் ஹரிபொட்டர் தொடரில் மிக முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டமைந்த ஒரு புத்தகம். சர்வதேச ரீதியில் வெற்றி பெற்றமை பற்றி ஆச்சரியப்படுவதற்கி்ல்லை. லார்ட் ஆப் த ரிங்ஸ் கதைக்குப் பிறகு இப்படியான கதைகளை எழுத ஆங்கில எழுத்தாளர்கள் தொடந்து முனைகின்றர். தமிழில் இப்படியான கதைகள் எழுதப்படுமா? எழுதப்பட்டாலும் அவை வெற்றி பெறுமா? என்பதெல்லாம் காலத்தின் மீதுள்ள கேள்விகள்.

அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்கின்றேன். நான் மட்டுமே இப்படி ஹரி பைத்தியம் என்று நினைத்த போது பல்கலையில் என்னைப் போல பல பைத்தியங்கள் இருக்குது என்பதை அறிந்துகொண்டேன். I just can’t wait till I lay my hands on the next book என்று சொன்ன சிங்கள நண்பியைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொண்டேன். விசருகள் கனக்க இருக்குது. நான் இதுகளோட ஒப்பிட்டா எவ்வளவோ பரவாயில்லை. பொதுவாகப் பொடியங்களை விடப் பெட்டைகளே ஹரி பொட்டர் புத்தகத்தில் பைத்தியமாக இருப்பதையும் கவனித்தேன். எது எப்படியானாலும் பல்கலைக்கழகத்தில் ஒரு உத்தியோக பூர்வமற்ற ஹரி கிளப் இருக்குதுங்கோ!!!!

அடுத்த புத்தகத்தில் எல்லாம் சுபமாக முடிய ஹரிக்காக ஒரு நிமிட இறைவணக்கம் செலுத்தி இந்த நீண்ட பதிவை முடிக்கின்றேன்.

அன்புடன்,
ஜெ.மயூரேசன்.

7 April 2007

69 : ஹரி பொட்டர் கடைசிப் புத்தகம்




ஹரி பொட்டர் தொடரில் கடைசியும் ஏழாவதுமான ஹரி பொட்டர் அன்ட் டெத்லி ஹலோவ்ஸ் வரும் ஜூலை மாதத்தில் வெளி வர உள்ளமை அனைவரும் அறிந்ததே. இந்தப் புத்தகத்தின் அட்டைப் படத்தை இணைத்துள்ளேன் பாருங்கள்.

இந்தப் புத்தகத்தில் ஹரி கொலை செய்யப்படுவார் என்று பலர் பேசிக்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் எழுத்தாளர் ரெளலிங் தான் இந்தக் ஹரி பொட்டர் தொடரை இதற்கு மேல் தொடர விருப்பம் இல்லை என்று சொல்லியுள்ளார். அத்துடன் இக் கதையை எதிர்காலத்தில் வேறு யாரும் தொடராமல் இருக்க ஹரியின் பாத்திரத்தைக் கொலை செய்வது அவசியம் ஆகின்றது.



ரெளலிங் மேலும் கூறுகையில் இந்தக் கதையின் கடைசிச் சொல்லு Scar என்று முடியும் என்பதாகும். அதாவது ஹரியின் நெற்றியிலே இருக்கும் வடுவைக் குறிப்பிடுவதாக இருக்குமோ என்று பலர் எண்ணுகின்றனர். எது எதுவாயினும் என்னையும் சேர்த்து உலகெங்குமுள்ள ஹரி இரசிகர்கள் ஹரி இறப்பதை விரும்ப மாட்டார்கள்.

இது இப்படி இருக்க கதையின் வில்லனான வால்டமோட்டின் உயிருடன் ஹரியின் உயர் கலப்பதாகக் கதை முடியும் என்று இன்னுமொரு பக்கம் சில விசர் சனங்கள் கதைத்துத் திரிகின்றது!!!!

நீங்களும் ஹரியிற்காக இறைவனை வேண்டுங்கள்.!!!!!!

2 April 2007

68 : என்னருமைக் காதலி கணனி

அண்மையில் ஆதவா ஒரு கட்டுரையில் தானும் கணனி விளையாட்டுகளும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப பிணைந்து இருந்தோம் என்று எழுதி இருந்தார். அதை வாசித்ததும் நானும் எனது கணனி அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணத்திற்கு வித்திட்ட ஆதவனிற்கு நன்றிகள்.

நான் முதன் முதலாகக் கணனியைக் கண்டது 1993 ல் அதாவது அப்போது ஆண்டு ஐந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் இடைவேளை நேரத்தில் அடிக்கடி செல்வது கணனி அறை யன்னலோரம். அப்போது எமது பாடசாலையில் ஒரு கணனி இருந்தது. அதை என்ன தேவைக்காகப் பயன் படுத்தினார்கள் என்பது இன்று வரை எனக்குத் தெரியாது. யன்னல் ஓரத்தில் நின்று கணனியை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பேன். கணனி என்பது எமக்கெல்லாம் எட்டாக்கனி. பாடசாலையில் அதிகமாகப் பாதுகாக்கப்பட்ட அறைகளில் அதுவும் ஒன்று. இவ்வாறு அந்தக் கணனியைப் பார்த்துப் பார்த்து என் காலம் கழிந்தது. கணனி என்றால் ஏதோ மாயா ஜாலம் செய்யும் என்று பேசிக்கொண்டனர். நண்பர்கள் தம் பாட்டிற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டார்கள். இப்போதுதான் தெரிகின்றது அத்தனையும் பொய் கணனி ஒரு முட்டாள் கருவி என்பது.

இவ்வாறு காலம் செல்கையில் எமது பாடசாலை நூலகத்திற்கு தமிழ் கம்பியூட்டர் சஞ்சிகை எடுக்கத் தொடங்கினார்கள். தவறாமல் முதலாவதாக அந்த சஞ்சிகையை எடுத்து வாசிப்பேன். பெரும்பாலான கட்டுரைகள் விளங்குவதே இல்லை. சும்மா படங்களையாவது பார்த்து விட்டே வைப்பேன். என் ஆர்வம் தணியவே இல்லை. கடைசியாக 1999 ல் கணனியைத் தொடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

1999 ல் எனது கல்விப் பொதுத்தாராதரப்பத்திர சராதாரண தரப் பரீட்சையை எடுக்க வேண்டி ஏற்பட்டது. பரீட்சை டிசம்பரில் முடிந்ததும் வழமைபோல உயர் தர வகுப்பிற்கான தனியார் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். ஆயினும் பாடசாலை தொடங்க குறைந்தது மூன்று மாதங்களாவது கழியும். இந்த மூன்று மாத காலத்தில் பெரும்பாலான மாணவர்கள் கணனி வகுப்பிற்குச் செல்வார்கள். நானும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கணனி கல்வி கற்றச் சென்றேன். நல்ல வேளையாக அப்போது பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஒரு கணனி ஆய்வு கூடத்தை பாடசாலைக்காகக் கட்டிக்கொடுத்து இருந்தது. ஆகவே குறைந்த செலவில் பாடசாலையில் கணனி வகுப்புகளை கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பாடசாலையில் முதன் முதலாக எம்மை அழைத்துச் சென்று கணனிக்கு அறிமுகம் என்று கணனியியலின் வரலாறு கணனியியலின் தந்தை என்று அறு அறு என்று அறுத்தார்கள் பின்பு ஒரு நாள் திடீர் என்று பாடசாலை கணனி ஆய்வு கூடத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். எனக்குக் கைகால் புரியாமல் இருந்தது. ஏதோ நாசா ஆய்வு கூடத்தினுள் நுழைந்து விட்டது போல மனதெல்லாம் பரபரப்பாக இருந்து. கணனி திரையில் சிவனும் பார்வதியும் இருப்பது போல இருக்கின்றது. அதாவது எங்கள் பாடசாலை இந்துப் பாரம்பரியத்தில் கண்ணாண பாடசாலை ஆகவே கணனி வோல் பேப்பரில் சிவன் பார்வதி படத்தைப் போட்டு இருந்தார்கள். அப்படியே மற்றக் கணனியைத் திரும்பிப் பார்க்கையில் சின்னது சின்னதாக பல ஜன்னல்கள் பறந்து கொண்டு இருக்கின்றன. விஷ் ... விஷ... என அவை வரும் வேகத்தைப் பார்த்தால் கணனித் திரையினில் இருந்து வெளியே விழுந்துவிடும் போல இருந்தது (பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அதுதான் ஸ்கிரீன் சேவர் என்று).
இப்பிடியே மலைத்து மலைத்தே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் கணனியில் எம்மை உட்கார வைத்தார்கள். பெயின்டில் படம் கீறிப் பழகுமாறும் கேட்டுக்கொண்டனர். இதன் மூலம் சுட்டி எமது கட்டுப் பாட்டுக்குள் வரும் என்பது அவர்களின் கணிப்பு. சில நாட்கள் இவ்வாறே படம் கீறுவதில் கழிந்தது. இரவில் தூக்கத்தில் கூட எம்.எஸ் பெயின்டில் படம் கீறுவேன். இப்போ நினைத்தால் சிரிப்பு வரும். பின்னர் மெல்ல மெல்ல ஆபீஸ் தொகுப்பு, வின்டோஸ் என்பனவும் கற்பிக்கப்பட்டன.

இவ்வாறு கணனி பற்றிய அடிப்படை அறிவு வந்ததும் கணனி சஞ்சிகைகள் குறிப்பாக தமிழ் கம்பியூட்டர் போன்றவற்றில் கணிசமாக பகுதி விளங்கத் தொடங்கியது. பாடசாலையில் சஞ்சிகையை நேரம் கழித்தே சஞ்சிகை வாங்குவார்கள் என்பதால் நானே வாங்கத் தொடங்கினேன். நானும் எனது நண்பன் பிரசாந்தும் (இப்போ ஒரு தொண்டர் நிறுவனத்தில் கணனி வலைப்பின்னல் மேலாளராகப் பணி புரிகின்றான்) எம்மிடையே கணனி நோக்கிய ஆர்வம் பொங்கி வழிவதை இனம் கண்டுகொண்டோம். இந்த கணனியே இருவரையும் நல்ல நண்பர்களாக மாற்றிவிட்டது.

இதே வேளை இணையம் பற்றிய ஆர்வமும் மெல்ல மெல்ல பற்றத் தொடங்கியது. இணையம் என்பது அப்போது மிக மிக பெறுமதியான பொருள். திருகோணமலையில் இணையம் பார்க்க நிமிடத்திற்கு ரூபா 4 முதல் ரூபா 7 வரை வசூலிப்பார்கள் (மணிக்கு கிட்டத்தட்ட 240 ரூபா). அப்போது ஒரு மின்னஞ்சல் முகவரி தொடங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியது. ஹாட்மெயிலில் ஒரு மின்னஞ்சல் கணக்குத் தொங்கிக்கொண்டேன். இன்று வரை அந்த கணக்கைப் பாதுகாத்து வருகின்றேன். இப்போ அந்த மின்னஞ்சல் கணக்கிற்கு ஏழு வயது ஆகின்றது. இணையம் சம்பந்தமான தமிழ் புத்தகங்களை வாங்கி வாசித்துக் கொண்டேன். ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்க விரும்பினாலும் ஆங்கிலம் மட்டம். அதனால் தமிழ் புத்தகங்களில் தங்கியிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. நான் வாசித்த புத்தகங்களில் பிரபலமானது என்று சொன்னால் அது Internet என்கிற சுந்தர்ராஜன் எழுதிய புத்தகம்.

இவ்வாறு பல முயற்சிகளில் நான் இறங்கினாலும் என்னிடம் என்று ஒரு கணனி இருக்கவில்லை. என்னுடைய நண்பன் ஒருவனுக்கு சுவிற்சர்லாந்தில் இருக்கும் அவன் மாமனார் ஒரு 486 கணனியை அனுப்பியிருந்தார். அந்தக் கணனியிலேயே நாம் பல டாஸ் கேம்களை விளையாடினோம். விளையாடிய விளையாட்டுகளில் எனக்குப் பெயர் ஞாபகம் இருப்பதென்றால் 3D Wolf. ஒரு கை வந்து கணனித் திரையில் தெரியும் முன்னால்வரும் எதிரிகளைச் சுட்டு விட்டு சிறைச்சாலையில் இருந்து நான் தப்ப வேண்டும் இதுதான் கதை. இந்த கணனி விளையாட்டை அரைமணி நேரம் விளையாடினால் பின்னர் ஒரு மணிநேரம் எனக்குத் தலை சுற்றும். அந்தளவு ஈடுபாட்டுடன் விளையாடுவேன். இதைவிட ஒரு ஹெலி விளையாட்டு மற்றது Dogs என்னுமொரு விளையாட்டு என்பனவே நான் அவன் கணனியில் விளையாடியது.

2000 ம் ஆண்டும் பிறந்தது எல்லாரும் Y2K என்றொரு பிரைச்சனை வர உள்ளதாகப் பேசிக்கொண்டனர். நானும் இது பற்றி பல இடங்களில் வாசித்து அறிந்து கொண்டேன் கடைசியாக எதுவும் நடக்கவில்லை. அதே வேளை வின்டோஸ் 2000 வெளியிடப்பட்டது. பில்கேட்சை தொலைக்காட்சியில் பார்த்து ஹாய்....!!!! என்று சத்தம் இட்டுச் சிரித்துக்கொண்டேன். அம்மா அப்பாவிற்கு வின்டோஸ் பற்றி நான் அறிந்தவற்றை எடுத்து விளாசினேன். இவ்வாறு என் கணனிப் பயனம் அழகாக அரங்கேறிக்கொண்டே இருந்தது. காலமும் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டு இருந்தது.

எது எப்படி இருந்தாலும் காலம் எம்மோடு விளையாடுவது நடந்தே தீரும் அல்லவா?. அவ்வாறு எனக்கும் காலத்துடன் நகர்ந்து உண்மையை நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதாவது கணனியிற்கும் எனக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரிக்கத் தொடங்கியது என்பதைவிட அதிகரிக்கப் பட வைக்கப்பட்டது என்றே சொல்லலாம்.

(தொடரும்.....)

23 March 2007

67 : ஹரி பொட்டர் 5 ம் புத்தகம் ஒரு பார்வை


உலகையே ஒரு கலக்குக் கலக்கிக்கொண்டு இருப்பதுதான் இந்த ஹரி பொட்டர் கதைகளும் திரைப்படங்களும். இது வரை ஆறு புத்தகங்களும் அவற்றில் முதல் நான்கு திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளது.

பொதுவாக இயற்கையை மிஞ்சிய அபரிதமான கதைகளை (fairy tale, Fantasy)நான் அதிகம் விரும்பி வாசிப்பது வழக்கம். வாசிப்பது மட்டுமல்ல திரைப்படங்களிலும் இப்படியான திரைப்படங்களை மறக்காமல் பார்த்துவிடுவேன். உ+ம் த லேர்ட் ஒப் த ரிங்ஸ்.

அந்த வரிசையில் ஹரி போட்டர் கதைப் புத்தகத் தொடரின் ஐந்தாம் புத்தகத்தை (Harry Potter and the Order of the Phoenix)அண்மையில் வாசித்து முடித்தேன். அது பற்றி ஒரு கலந்துரையாடல். நீங்களும் வாசித்தவரானால் உங்கள் கருத்துக்களையும் அள்ளி வீசுங்கள்.

கதை வழமைபோல டட்லி குடும்பத்தில் வீட்டில் ஆரம்பிக்கின்றது. டட்லி குடும்பம் ஹரியிற்கு எஞ்சியிருக்கும் ஒரே இரத்த உறவுள்ள குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஹரியின் தாயாரும் திருமதி டட்லியும் சகோதரிகள்.

டட்லி வீட்டில் பாடசாலை லீவில் என்ன செய்வது என்று அறியாமல் பொழுது போகாமல் நம்ம ஹரி வெட்டிப்பொழுது போக்கிக்கொண்டு இருக்கின்றார். தீரச் செயல்கள் இல்லாமல் அன்றாட வாழ்க்கை மிகவும் அலுப்பாகக் கடந்துகொண்டு இருக்கின்றது. இந்த வேளையில் ஒரு நாள் இரவு இரண்டு டீமென்டொர்ஸ் (கறுப்பு பிசாசு என்று சொல்லலாம்) ஹரியைத் தாக்குகின்றன.வீரத்தில் குறைவில்லாத ஹரி பெட்ரோனம் மந்திரம் மூலம் அந்த டீமென்டோர்சை அடித்து விரட்டுகின்றார். மூன்றாம் பாகத்தில் சிரியஸ் பிளக்கைக் காப்பாற்ற இதே மந்திரத்தை டீமென்டொர்ஸ்சுக்கு எதிராக ஹரி பாவித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் ஹரியின் ஒன்றுவிட்ட முரட்டுச் சகோதரனான குட்டி டட்லி மயிரிழையில் ஹரியினால் காப்பாற்றப்படுகின்றார்.

சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதியில் இந்த மந்திர தந்திர ஜந்துகள் வந்தமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அத்துடன் இந்த காவல்கார டீமென்டர்ஸ் (டீமென்டர்ஸ் பொதுவாக தப்பு செய்த மந்திரவாதிகளை அடைத்து வைத்திருக்கும் அஸ்கபான் சிறைச்சாலையைக் காவல் செய்ய மந்திர தந்திர அமைச்சினால் பயன்படுத்தப்படுகின்றது.) மாய தந்திர அமைச்சின் கட்டுப்பாட்டை மீறி ஒரு சக்தியினால் வழி நடத்தப்படுகின்றது என்பதும் தெரிய வருகின்றது.

ஒரு வழியாக ஹரி லீவு முடிய முன்னமே ஒரு தொகுதி மந்திர வாதிகள் துணையுடன் (மாட் ஐ மூடி போன்றவர்கள்) இலக்கம் 12, கிரிம்மோல்ட் பிளேஸ் என்ற முகவரிக்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். அங்கு சென்ற பின்னர் அதுதான் ஹரியின் காட் ஃபாதர் சிரியஸ் பிளக்கின் குடும்ப வீடு என்பதும் அந்த வீடு இருளின் தூதன் கெட்ட குரங்குப் பயலான வால்ட மோட்டுக்கு எதிராக இயங்கும் ஒரு இரகசிய அணியின் தலமைக் காரியாலயமாக இயங்குகின்றது. இந்த இரகசிய அணியில் ஹரியின் பாடசாலை தலமை ஆசரியர் டம்பிள்டோர் (கவனிக்கவும் டபுள் டோர் இல்லை), ஸ்னேப் (அந்த கறுப்பு கிறீஸ் தலைக்காரன்... அதுதான் சும்மா மந்திரக் கசாயம் காய்ச்சிக்கொண்டு இருப்பார்), சிரியஸ் பிளக், டாங்ஸ், கிங்ஸ்லி, வீஸ்லி குடும்பம் (ஹரியின் நண்பன் ரொன்னின் குடும்பம்), லூபின் (ஹரியின் மூன்றாம் ஆண்டில் தீய சக்திகளுக்கு எதிரான கலைகள் கற்பித்த ஆசிரியர். சிரியஸ், ஹரியின் அப்பா, லூபின் அந்தக் காலத்தில ஹாக்வார்ட்ஸ் பாடசாலையைக் கலக்கின பசங்க) போன்றவர்கள் இருக்கின்றார்கள்.

இதே வேளை ஹரி டீமென்டர்ஸ்சுக்கு எதிராகப் மந்திரத்தைப் பாவித்தார் அல்லவா. அது சாதாரண மகிள்ஸ் (மந்திரம் தெரியாத உங்களைப் போன்றவர்கள்) இருக்கும் இடத்தில பாவித்தமை கடும் குற்றம் என்று மந்திர தந்திர அமைச்சில் ஹரிக்கு விசாரணை நடக்கின்றது. விசாரணையில் ஹரியைக் கவுக்க மந்திர தந்திர அமைச்சர் முயன்றாலும் இடையில் உள்ளே புகுந்த டம்புள்டோர் ஹரி மீது குற்றம் விழாமல் காப்பாற்றுகின்றார்.

கடைசியாக ஹரி தொடர்ந்து ஹாக்வார்ட்ஸ் பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெறுகின்றார். பாடசாலை செல்லும் நாளும் வருகின்றது ஹரி பாடசாலையும் செல்கின்றார். இம்முறை இரயிலில் ஹரி புதிய பாத்திரம் ஒன்றைச் சந்திக்கின்றது. அவர்தான் லூனா. லூனாவின் தந்தை மந்திர தந்திர உலகில் வெளிவரும் குயிப்லர் (The Quibbler)எனும் பத்திரிகையின் ஆசரியர். இதே வேளையில் மந்திர தந்திர அமைச்சின் தலையீட்டுடன் வெளிவரும் த புரபெட் (The prophet)என்று ஒரு பத்திரிகை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


ஹரி பாடசாலை சென்றது பலர் ஹரியை ஏளனமாகப் பார்க்கத் தொடங்கினர். இதற்குக் காரணம் மந்திர தந்திர அமைச்சும் த புரபெட் பத்திரிகையும் இல்லாதது பொல்லாதது பற்றி வதந்தி பரப்பிவிட்மையாகும். கடந்த வருடம் ஹரி கதையின் வில்லனும் இருளின் தூதனுமான லார்ட் வால்டமோர்ட்டைப் பார்த்தது பொய் என்றும் அவர் உண்மையில் திரும்பி வரவில்லை என்றும் அந்தப் பத்திரிகை எழுதித் தள்ளி இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் ஹரியை ஏதோ பொய்யனைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினர்.


இது போதாதென்று மந்திர தந்திர அமைச்சின் பரிந்துரையில் கெட்ட மந்திரக் கலைகளுக்கு எதிரான ஆசிரியராக உம்ப்ரிச் என்னும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுகின்றார். இவர் மெல்ல மெல்ல பாடசாலையின் கட்டுப்பாட்டை டம்பிள்டோரிடம் இருந்து தன்னிடம் மாற்றத் தொடங்கினார். இவர் பலதடவை லார்ட் வால்டமோர்ட் திரும்பியதாக பொய் சொல்வதாகக் கூறி ஹரியிற்கு தண்டனை வழங்கினார். அத்துடன் ஹரி குயிடிச் விளையாடத் தடை போடுகின்றார். வீஸ்லி இரட்டைச் சகோதரர்களை பாடசாலையில் இருந்து நீங்குகின்றார். இவர் அட்டகாசம் எதுவரை போனது என்பது கதையை வாசித்து அறிந்துகொள்ளுங்கள்.

இந்த உம்பிரிட்ச்சின் அட்டகாசங்களும், புதிய சட்டங்களும் அதிகரிக்கவே ஹரியும் அவரது சில நண்பர்களும் சேர்ந்து ஒரு சிறப்புப் வகுப்பை ஒழுங்குசெய்கின்றனர் அத்துடன் அங்கு ஹரி தான் அறிந்த மந்திர தந்திரங்களை மற்றயவர்களுக்குக் கற்பிக்கின்றார். இந்த குழுவினர் தம்மை டம்புள்டோரின் படை என்று பெயர் இட்டுக்கொள்வதையும் நான் சொல்லியே ஆகவேண்டும்.


கதை இப்படி மெல்ல மெல்ல சிக்கல் அடையும் நேரத்தில் ஹரியின் ஆசரியரும் நண்பருமான ஹக்ரிட் நீண்டநாளாகப் பாடசாலைக்கு வராமல் இருக்கின்றார். ஏன் வராமல் இருந்தார் என்னத்தைக் கூட்டிக்கொண்டு வந்தார் என்பதெல்லாம் நான் சொல்லப் போவதில்லை.

இதேவேளை ஹரியிற்கு நெற்றியில் உள்ள அந்த வடு சில வேளைகளில கடுமையாக எரியத் தொடங்கியது அத்துடன் கெட்ட கனவுகளும் வரத் தொடங்குகின்றது. அந்த வடு வால்ட மோர்ட்டினால்தான் ஏற்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வால்டமேர்ட்டின் உணர்வுகள் ஹரியிலும் பிரதிபலிக்கத் தொடங்குவதுடன் வால்டமோட் முன்நிலையில் நடப்பது ஹரிக்கு கனவாகத் தெரியத் தொடங்குகின்றது. இவ்வாறு கனவு மூலம் திரு.வீஸ்லி தாக்கப்படுவதை அறிந்து அந்த இரகசியக் குழுவின் உதவியுடன் வீஸ்லி காப்பாற்றப்படுகின்றார். இப்படிக் கனவு மூலம் வால்ட மோர்ட் பற்றி ஹரி அறியும் வல்லமை பெற்றது நன்மையாக முடிந்ததா என்பதை நான் சொல்லப் போவதில்லை அதையும் படத்திலேயோ அல்லது வாசித்தோ அறிந்துகொள்ளுங்கள்.

ஹரி இந்தக் கனவுகளை காணாமல் இருக்க பேராசிரியர் சினேப்பிடம் சிறப்பு வகுப்பு எடுக்கப் போகின்றார் அங்கு 15 வயதில் ஹரியின் அப்பாவும், சிரியஸ் பிளக்கும் ஸ்னேப்பைப் படுத்தும் பாட்டை சோல்லி மாளாது. வயிறு வலிக்கச் சிரித்தேன். ஆனாலும் ஹரிக்கு அவர் அப்பாவின் செயற்பாடு அவ்வளவாகப் பிடிக்காது போனதுதான் ஏன் என்று விளங்கவில்லை.

இக்கதையின் படி எங்கள் நாயகனுக்கு 15 வயது. அந்த வயதுக் குளப்பமும் அவருக்கு வந்து சேர்ந்து விடுகின்றது. அதுதான் காதல் காதல் காதலில் உள்ளம் கண்ணாம் மூச்சி ஆடத் தொடங்கியது. சோ எனும் சீனப் பெண்ணுடன் காதலில் விழும் படும் பாடு சொல்லி மாளாது. என்றாலும் அந்தப் பொண்டு ரொம்பவுமே மோசம். 4 ம் பாகத்தில் இந்தப் பெண்ணுடன்தான் கடைசியில் இறக்கும் செட்ரிக் டிகொரி போல் நடனத்திற்குச் செல்கின்றார்.

கதை இப்படியே நகர்ந்து கடைசி கிளைமாக்ஸ் மந்திர தந்திர அமைச்சுக் கட்டடத்துள் நடைபெறுகின்றது. சண்டைக் காட்சி வாசிக்கும் போதே நுனிக்கதிரையில் உட்கார வைத்துவிட்டது. அம்மாடியோவ்... என்னவொரு மயிர்கூச்செறியும் சண்டை அது. இந்தச் சண்டை இறுதியில் ஹரியின் உயிருக்குயிரான உறவு ஒன்று இழக்கப்டுகின்றது. அது யார் என்பதைச் சொல்ல முடியாது. ஆயினும் இன்று கதை வாசித்து முடிந்ததில் இருந்து எனக்கு மனம் சரியே இல்லை. ரெளலிங் என்ன மனது இல்லாதவங்களா என்று யோசிக்க வைத்தது.

இங்கு நான் சில கதை நிகழ்ச்சிகளைக் கூறியுள்ளேன். கதை வாசிக்கச் சந்தாப்பம் கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள். என்னைப் பொறுத்தவரையில் நல்ல பொழுதுபோக்கு நாவல்.

பி.கு : 6ம் புத்தகம் கதை பற்றிய தகவல்களை இங்கே வெளியிடுவது கடுமையாகத் தடைசெய்யப்படுகின்றது. மீறி எழுதினால் பிரதீப் அண்ணா மூலம் நீக்கப்படும். (உன் மிரட்டலையும் மீறி இங்க எழுதுவதென்றால் அவராத்தான் இருக்கும் என்று நீங்கள் சொல்வது எனக்குக் கேட்கின்றது.)

20 March 2007

66 : நினைவுகள் IV

இறைவன் மானிடர்களுக்கு கொடுத்த அரிய மருந்து மறத்தலே. இதன் காரணமாகவே மறத்தலும் மன்னித்தலும் இவ்வையகத்திலே சாத்தியம் ஆகின்றது. எமது வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் எமக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. முக்கியமாக நிகழ்வுகள் மட்டுமே பசுமரத்தாணி போல பதிந்து விடுவது இயற்கை. இதில் வியப்பேதும் இல்லை காரணம் இவை உங்கள் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டன என்று அர்த்தம். மறக்கும் குணம் இருந்துமே மானிடர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால் மறவா இயல்பு இருந்திருந்தால் என்ன நிகழுமோ?? ஐயகோ!

என்மனதில் இருந்து பல நினைவுகள் அகன்று விட்டபோதும் சில நினைவுகள் இன்றும் பசுமரத்தாணி போல பசுமையாக உள்ளன. ஏற்கனவே உங்களுடன் என் நினைவுகளை மூன்று தடவை பகிர்ந்தேன். இப்போது நான்காம் தடவையாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகின்றேன்.

அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன் காமிக்ஸ் புத்தகம் படிப்பதில் கடும் ஆர்வம். லயன், முத்து, ராணி காமிக்ஸ் என்று அனைத்து காமிக்சுகளையும் வாசித்து முடித்து விடுவேன். அன்று என் நண்பன் ஒருவன் என்னிடம் இருந்த காமிக்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டுத்தருவதாகக் கூறி என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டான். அந்தப் புத்தகத்தை தன் ஆங்கிலப் புத்தகத்தினுள் வைத்துக்கொண்டு வீடு சென்றுவிட்டான்.

மாலை தனம் டீச்சரிடம் வகுப்பு. அவர்தான் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞாணம் ஆகிய பாடங்களை கற்பிற்பார். இந்தத் தனம் ரீச்சரைப் பற்றி நான் பலதடவை கூறி இருக்கின்றேன். கண்டிப்பு ஒழுக்கம், கலாச்சாரம் என்பவற்றை கண்ணாகக் கண்காணிப்பார். யாராவது பிசகினால் அடித்து நெளிவெடுத்து விடுவார். நண்பன் நான் கொடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அன்று பார்த்து வெளியே எடுக்காமல் அப்படியே கொண்டுவந்து டீச்சருக்குப் பக்கத்தில இருந்திட்டான். அவர் கற்பிற்பதற்காகப் புத்தகம் கேட்டபோது காமிக்ஸ் புத்தகத்துடன் சேர்த்து ஆங்கிலப் புத்தகத்தைக் கொடுத்து விட்டான். பின்பு என்ன மயூரேசன் எழுப்பபட்டு பல கேள்விகள் கேட்கப்பட்டார். அத்துடன் காமிக்ஸ் புத்தகம் அனைத்தும் என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. என்ன செய்ய ஒட்டாண்டியாகி எந்த காமிக்ஸ் புத்தகமும் இல்லாமல் தனிமரமாக்கப்பட்டேன்.

இதே வேளை நான் மாட்டுப் பட்டவுடன் அவர் அதை பெரிதாக எடுக்காத மாதிரிக் காட்டிக்கொண்டு மற்றவர்களிடம் உங்களிடம் எத்தனை காமிக்ஸ் புத்தகம் உள்ளது என்று விசாரித்தா. உசாரான மாணவர்கள் தங்களிடம் 20, 30 என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்லலாயினர். எல்லாரும் சொல்லி முடிந்ததும்
“சரி இப்ப எல்லாரும் வீட்டுக்குப் போய் உங்கட புத்தகம் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வாங்கோ!”

அப்பத்தான் எல்லாரும் ஓடி முழிச்சாங்கள். என்ன முழிச்சு என்ன பிரயோசனம் அதுதானே கண்கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம் ஆகிட்டுது.

மாலை நேர டியூசன் வகுப்பில் இப்படி என்றால் ஒரு நாள் பாடசாலையில் பெரும் சங்கடமான காரியம் ஒன்றை நிறை வேற்றினேன்.

வழமைபோல மதிய இடைவேளைக்குப் பிறகு கணக்குப் பாடம் தொடங்க இருந்தது. இன்னமும் ஆசிரியர் வரவில்லை. வழமையாக முதல் ஐந்து நிமிடத்திற்குள் ஆசிரியர்கள் வந்து விடுவார்கள். இன்னமும் வராதது எமக்குச் சந்தோஷமாகவே இருந்தது. நேரம் போக போக சேர் இனிமேல் வரமாட்டார்டா என்று சத்தமாகச் சத்தமிடும் அளவிற்கு சந்தோஷம் புரைகடந்து ஓடிக்கொண்டு இருந்தது.

இந்தவேளையில் எங்கள் வகுப்பு நண்பன் ஒருவன் சத்தம் போடாமல் நழுவிக்கொண்டு வெளியே போவதை இன்னுமொரு நண்பன் கண்டுவிட்டான். போய் மறந்து போய் இருக்கிற ஆசிரியரைக் கூட்டிக்கொண்டு வந்து விடுவானோ என்ற பயத்தில் அதை எனக்கும் வேறு சொல்லிவிட்டான்.

“டேய் எங்கடா வெளியால போறாய்?” நான் சத்தமிட்டுக் கேட்டேன்.

“வயிறு கொஞ்சம் அப்செட்டடா!.. “ வயிற்றைத் தடவிக்காட்டியவாறே நகர்ந்தான்.

போடா போ... இன்டைக்கு உனக்கு ஆப்பு வைக்கிறன்டா. என் மனம் சொல்லிக் கொண்டது.

இரண்டொரு நிமிடங்களில் நான் பூட்டியிருந்த கழிவறை வாசலில் நின்று நாய் பூனை என்று எனக்குத் தெரிந்த மாதிரி விலங்குகளின் குரலில் எல்லாம் ஒலி எழுப்பினேன். உள்ளே இருந்து சத்தம் வரவேயில்லை. இதனால் எனக்கு கோபம் அதிகரிக்கவே நான் சில கூளாம் கற்களைப் பொறுக்கி வந்து கதவின் மேல் இடுக்கினாலும் கீழ் இடுக்கினாலும் உள்ளுக்குள் எறிந்துகொண்டே இருந்தேன். இன்னமும் உள்ளிருந்து ஒரு சத்தமும் இல்லை. குறைந்த பட்சம் டேய் யார்டா அந்தக் குரங்கு என்று கூட சத்தம் வரவில்லை.

மிகுந்த ஏமாற்த்துடன் அவ்விடம் விட்டு நகர முட்பட்ட போது எனக்கு இன்னுமொரு எண்ணம் வந்தது. அதாவது மேல் மாடிக்குச் சென்று நண்பன் கழிவறையிலிருந்து வெளியில் வரும் போது அவனின் மீது கொஞ்சம் நீர் ஊற்றலாம் என்பதுதான் அது.

நினைத்ததைத் செய்து முடிக்கும் நோக்குடன் போத்தலில் நீரை நிரப்பிக் கொண்டு மாடியில் ஏறி நின்றேன். நேரம் நகர்கின்றது இன்னமும் அவன் வரவில்லை.

திடீர் என்று எனக்குப் பின்பக்கம் இருந்து ஒரு கை என் தோழில் விழவே நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அங்கே என் நண்பன்.

“டேய் நீதானே உள்ளுக்க போனாய்?”

“நானா? கழிவறைக்குள்ளையா? போடா விசரா, நான் கன்டீனுக்குப் போய் இரண்டு கட்லட் சாப்பிட்டிட்டு வாறன். உண்மையைச் சொன்னா நீங்களும் இழுபட்டுக்கொண்டு வருவியளே. அதுதான் வயிறு சரியில்லை என்டு சொன்னான்”

“ஆ...சரி.. சரி” சொல்லிக்கொண்டு என் கைதானே போத்தலைக் கீழே நிலத்தில் வைத்தது. இப்போது கீழே எட்டிப் பார்த்த போது கழிவறைக்குள் இருந்து எமது கணக்கு வாத்தியார் வெளியிலே வந்து கொண்டிருந்தார். பாடம் கற்கத் தயாராக நாங்கள் வகுப்பை நோக்கி ஓடினோம். (என்னுடன் இத்தனை காலம் இருந்த இரகசியம் இன்று இணையத்தில் யுனித் தமிழில் அரங்கேறிவிட்டது :))



வீர தீரப் பயணங்கள் தொடரும்......

12 March 2007

65 : பச்சைக்கிளி முத்துச்சரம் - விமர்சனம்



போக்கிரி பார்த்த பின்பு திரையரங்கு சென்று ஒரு தமிழ் படம் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவேயில்லை.இப்பொழுது ஒரு நிறுவனத்தில் பயிற்சிக் காலத்தில் இருப்பதால் கிழமை நாட்களில் நேரம் கிடைப்பதேயில்லை. கிழமை நாள் போனால் பரவாயில்லை என்று யோசித்தால் சனிக்கிழமையும் வேலை. அரை நேரம் என்ற பெயரில் 2 மணி வரையும் வேலை இருக்கும். அன்றும் வேலை முடிந்ததும் எனது நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவன் வரத் தயாரா என்று கேட்டேன். மறு முனையில் சரி என்று பதில் வரவே இருவரும் சொல்லி வைத்தபடி தியட்டர் வாசலில் சந்தித்துக் கொண்டோம்.

உள்ளே நுழைந்து டிக்கட் கவுண்டரில் நுழைவுச் சீட்டை வேண்டிய போது திரையரங்கில் மற்ற தளத்தில் மீரா ஜாஸ்மினின் படம் ஓடுவது தெரிந்தது. மீராவின் பரம இரசிகனாச்சே நான். ஆகவே மனதில் சிறு குளப்பம் என்றாலும் நண்பனின் கரைச்சலினால் பச்சைக்கிளி முத்துச்சரம் செல்வது என்று முடிவானது.

உள்ளே செல்ல சரியாகப்படம் ஆரம்பித்து விட்டிருந்தது. சரத்குமாரை அப்பா அப்பா என்று கலங்கியவாறு ஒரு அபலைச் சிறுவன் அணைக்கிறான் பின்பு சரத்குமார் அந்தக் குளந்தைக்கு ஒரு ஊசி போடுகின்றார். முதல் காட்சியைப் பார்த்ததும் சரத்குமார் வைத்தியர் என்று யோசித்தவாறே ஒரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டோம்.

அதன் பின்பு திடீர் என்று திரைக்கதை நம்மை சில காலங்கள் பின்னோக்கி எடுத்துச் செல்கின்றது. அங்கே சரத்குமார், அழகான மனைவி, ஒரு குளந்தையைக் காட்டுவதுடன் ஒரு பாடல் செல்கின்றது. உன் சிரிப்பினில் என்ற பாடலுக்கு சரத், அவர் மனைவி நெருக்காமாகத் தோன்றுகின்றனர். அருமையான பாடல் அருமையான மெட்டு பாடல் மனதை வருடிச்செல்கின்றது.

உன் சிரிப்பினில் என் மனதின் பாதியும் போக
உன் கண் இமைகளின் என் பார்வையின் மீதியும் தேய!!

இப்படிப் பாடலில் லயித்துக்கொண்டு சரத்தின் அழகான குடும்பத்தை இரசித்துக் கொண்டு இருந்த வேளையில் வழமைபோல குடும்பத்தில் கலக்கம் தோன்றத் தொடங்குகின்றது. அதாவது சரத்தின் குளந்தைக்கு நீரழிவு நோய் வந்து விடுகின்றது. இதனால் சரத், அவர் மனைவி உறவு முன்பு போல் இல்லாமல் விலகி விலகிச் செல்கின்றது. மனைவி கணவனை விட குளந்தையைப் பராமரிப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றார். வழமையான சராசரிக் கணவனான சரத்தின் கண்கள் நாளாந்தம் பயனம் செய்யும் புகையிரதத்தில் ஒரு அழகான மாதுவை நோட்டம் விடத் தொடங்குகின்றது.

அந்த அழகான மாது யாருமல்ல ஜோதிகாதான். சாதாரண பேச்சில் தொடங்கும் இருவரது நட்பும் ஆழமாக வேரூண்டத் தொடங்குகின்றது. இருவரும் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒழிவு மறைவின்றி பகிர்ந்துகொள்கின்றனர். தமது மனைவி மகன் பற்றி சரத்தும் தனது கணவன் பற்றி ஜொவும் கருத்துப் பரிமாறிக்கொள்கின்றனர். முதலில் விலக எத்தனித்தாலும் இருவரும் விலக முடியாமல் மேலும் மேலும் ஒருவரை ஒருவர் நெருங்குகின்றனர். இருவரும் சந்திக்கும் போது கரு கரு விழிகளில் எனும் எனக்கு தற்போது மிகப்பிடித்தமான பாடலை பின்னணியில் போட்டுக் கலக்குகின்றார்கள். என்ன ஒரே சோகம் அந்தப் பாடல் படத்தில் முழுமையாக வரவில்லை. துண்டு துண்டாக வெட்டி வெட்டி வருகின்றது.

சாதாரண உணவகத்தில் உணவுஉண்டு மகிழ்ந்த இருவரும் பின்னர் ஒரு நாள் ஒரு டாக்சியில் பீச் ரிசோட் ஒன்றில் அறை வாடகைக்குப் போட்டு அங்கு தங்குகின்றனர். இருவரும் பெரும் தயக்கங்களுக்கு மத்தியில் ஒரு வரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிக்கின்றனர். அப்போது கதவில் யாரோ தட்டும் சத்தம்.
“ யார்?” சரத்

“ரூம் பாய் சார்” வெளியிலிருந்து ஒரு குரல்.

சரத் கதவைத் திறக்க ஒரு திருடன் உள்ளே புகுந்து சரத்தை அடித்துப் போட்டு விட்டு பணம் என்பவற்றை திருடுகின்றான். திருடும் போது இருவரும் கணவன் மனைவி இல்லை என்பதை அறிந்து அதை வைத்து இருவரையும் மிரட்டி அப்பப்போது பணம் கேட்கின்றான் அந்த லோரன்ஸ் என்ற ரவுடி. சரத் உண்மையை வீட்டில் மனைவியிடமும் சொல்ல முடியாமல் பொலீஸ் போகவும் முடியாமல் அவஸ்தைப் படுகின்றார். தன் மகனின் எதிர்காலத் தேவைக்காகச் சேமித்து வைத்திருந்த எட்டு லட்சம் பணத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ரவுடிகளிடம் தாரை வார்க்கின்றார். எட்டு லட்சமும் முடிந்து அதன் பின்னர் இவரிடம் பணம் இல்லாதபோதும் ரவுடி சரத்தை அரியண்டம் செய்யவே உண்மையை தன் மனைவியிடம் சொல்ல முடிவு செய்கின்றார்.

உண்மையை மனைவியிடம் சொன்னதும் மனைவி சரத்திடம் கூட சொல்லாமல் கோவித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிடுகின்றார். மனைவி வெளியில் போய்விட்ட நேரத்தில் குளந்தையைத் தனியே கவனிக்க வேண்டிய பொறுப்பு சரத்திடம். இதற்குள் தன்னிடம் கொள்ளையிட்ட லாரன்ஸ் யார் என்பதையும் அவன் பின்னாலுள்ள கூட்டத்தையும் சரத் கண்டுபிடிக்கின்றார்.

இதன் பின்னர் நான் கதையைச் சொன்னால் நீங்கள் தியட்டர் சென்று திரைப்படம் பார்ப்பதற்கு அர்த்தம் இருக்காது. ஆகவே நீங்கள் மிகுதியை தியட்டரில் சென்று பாருங்கள். திடீர் திருப்பம் இதன் பின்னர் திரைப்படத்தில் உள்ளது.

திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல்கள் திரைப்படத்திற்கு வலுச் சோக்கின்றன. ஆயினும் கெளதம் மேனனின் படம் என்று பார்த்ததற்கு ஏமாற்றம்தான். மோசம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சிறந்த திரைப்படம் என்றும் சொல்ல முடியாது. சரத்தில் வயசு தெரிந்தாலும் அடிதடிக்காட்சிகளில் புகுந்து கலக்குகின்றார். வழமையான தமிழ் சினிமாச் சண்டையான தனிநபர் பல வில்லன்கள் என்ற கொள்கையைத் தவிர்த்திருக்கலாம். முதலில் தனியாளாக வில்லன்களிடம் அடிபடும் சரத் பின்னர் தனியாளாக நின்று பல வில்லன்களைச் சமாளிப்பது எரிச்சலைத் தருகின்றது. மற்றும் படி சரத்தின் நடிப்பு சிறப்பு. ஜோ பற்றிச் சொல்லத் தேவையில்லைதானே. அதே துறு துறு நடிப்பு. சரத்தின் மனைவியாக நடித்தவர் முகத்தில் பருக்கள் இருந்தாலும் அவருக்கும் அழகான சிரிப்பு. மொத்தத்தில் நல்ல நடிகர் பட்டாளம்.
பி.கு : கடைசிக் காட்சிகளில் சரத் குடும்பம் ஹைதராபாத் போகின்றது. அங்கே லாரன்ஸ் கூட்டத்திடம் இருந்து தப்பி வாழ முயற்சிக்கின்றது. ஹைதரபாத் என்றதும் எங்கயாவது அண்ணா தெரியிறாரா என்று எட்டி எட்டிப் பார்த்தேன். ம்ஹூம்... ஆளைக் காணவேயில்லை. பெருத்த ஏமாற்றம்.