20 March 2007

66 : நினைவுகள் IV

இறைவன் மானிடர்களுக்கு கொடுத்த அரிய மருந்து மறத்தலே. இதன் காரணமாகவே மறத்தலும் மன்னித்தலும் இவ்வையகத்திலே சாத்தியம் ஆகின்றது. எமது வாழ்க்கையில் நடக்கும் எல்லாம் எமக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. முக்கியமாக நிகழ்வுகள் மட்டுமே பசுமரத்தாணி போல பதிந்து விடுவது இயற்கை. இதில் வியப்பேதும் இல்லை காரணம் இவை உங்கள் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்திவிட்டன என்று அர்த்தம். மறக்கும் குணம் இருந்துமே மானிடர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால் மறவா இயல்பு இருந்திருந்தால் என்ன நிகழுமோ?? ஐயகோ!

என்மனதில் இருந்து பல நினைவுகள் அகன்று விட்டபோதும் சில நினைவுகள் இன்றும் பசுமரத்தாணி போல பசுமையாக உள்ளன. ஏற்கனவே உங்களுடன் என் நினைவுகளை மூன்று தடவை பகிர்ந்தேன். இப்போது நான்காம் தடவையாக உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகின்றேன்.

அப்போது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தேன் காமிக்ஸ் புத்தகம் படிப்பதில் கடும் ஆர்வம். லயன், முத்து, ராணி காமிக்ஸ் என்று அனைத்து காமிக்சுகளையும் வாசித்து முடித்து விடுவேன். அன்று என் நண்பன் ஒருவன் என்னிடம் இருந்த காமிக்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டுத்தருவதாகக் கூறி என்னிடம் இருந்து பெற்றுக்கொண்டான். அந்தப் புத்தகத்தை தன் ஆங்கிலப் புத்தகத்தினுள் வைத்துக்கொண்டு வீடு சென்றுவிட்டான்.

மாலை தனம் டீச்சரிடம் வகுப்பு. அவர்தான் ஆங்கிலம் மற்றும் விஞ்ஞாணம் ஆகிய பாடங்களை கற்பிற்பார். இந்தத் தனம் ரீச்சரைப் பற்றி நான் பலதடவை கூறி இருக்கின்றேன். கண்டிப்பு ஒழுக்கம், கலாச்சாரம் என்பவற்றை கண்ணாகக் கண்காணிப்பார். யாராவது பிசகினால் அடித்து நெளிவெடுத்து விடுவார். நண்பன் நான் கொடுத்த காமிக்ஸ் புத்தகத்தை அன்று பார்த்து வெளியே எடுக்காமல் அப்படியே கொண்டுவந்து டீச்சருக்குப் பக்கத்தில இருந்திட்டான். அவர் கற்பிற்பதற்காகப் புத்தகம் கேட்டபோது காமிக்ஸ் புத்தகத்துடன் சேர்த்து ஆங்கிலப் புத்தகத்தைக் கொடுத்து விட்டான். பின்பு என்ன மயூரேசன் எழுப்பபட்டு பல கேள்விகள் கேட்கப்பட்டார். அத்துடன் காமிக்ஸ் புத்தகம் அனைத்தும் என்னிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. என்ன செய்ய ஒட்டாண்டியாகி எந்த காமிக்ஸ் புத்தகமும் இல்லாமல் தனிமரமாக்கப்பட்டேன்.

இதே வேளை நான் மாட்டுப் பட்டவுடன் அவர் அதை பெரிதாக எடுக்காத மாதிரிக் காட்டிக்கொண்டு மற்றவர்களிடம் உங்களிடம் எத்தனை காமிக்ஸ் புத்தகம் உள்ளது என்று விசாரித்தா. உசாரான மாணவர்கள் தங்களிடம் 20, 30 என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்லலாயினர். எல்லாரும் சொல்லி முடிந்ததும்
“சரி இப்ப எல்லாரும் வீட்டுக்குப் போய் உங்கட புத்தகம் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வாங்கோ!”

அப்பத்தான் எல்லாரும் ஓடி முழிச்சாங்கள். என்ன முழிச்சு என்ன பிரயோசனம் அதுதானே கண்கெட்ட பிறகு சூரிய நமஷ்காரம் ஆகிட்டுது.

மாலை நேர டியூசன் வகுப்பில் இப்படி என்றால் ஒரு நாள் பாடசாலையில் பெரும் சங்கடமான காரியம் ஒன்றை நிறை வேற்றினேன்.

வழமைபோல மதிய இடைவேளைக்குப் பிறகு கணக்குப் பாடம் தொடங்க இருந்தது. இன்னமும் ஆசிரியர் வரவில்லை. வழமையாக முதல் ஐந்து நிமிடத்திற்குள் ஆசிரியர்கள் வந்து விடுவார்கள். இன்னமும் வராதது எமக்குச் சந்தோஷமாகவே இருந்தது. நேரம் போக போக சேர் இனிமேல் வரமாட்டார்டா என்று சத்தமாகச் சத்தமிடும் அளவிற்கு சந்தோஷம் புரைகடந்து ஓடிக்கொண்டு இருந்தது.

இந்தவேளையில் எங்கள் வகுப்பு நண்பன் ஒருவன் சத்தம் போடாமல் நழுவிக்கொண்டு வெளியே போவதை இன்னுமொரு நண்பன் கண்டுவிட்டான். போய் மறந்து போய் இருக்கிற ஆசிரியரைக் கூட்டிக்கொண்டு வந்து விடுவானோ என்ற பயத்தில் அதை எனக்கும் வேறு சொல்லிவிட்டான்.

“டேய் எங்கடா வெளியால போறாய்?” நான் சத்தமிட்டுக் கேட்டேன்.

“வயிறு கொஞ்சம் அப்செட்டடா!.. “ வயிற்றைத் தடவிக்காட்டியவாறே நகர்ந்தான்.

போடா போ... இன்டைக்கு உனக்கு ஆப்பு வைக்கிறன்டா. என் மனம் சொல்லிக் கொண்டது.

இரண்டொரு நிமிடங்களில் நான் பூட்டியிருந்த கழிவறை வாசலில் நின்று நாய் பூனை என்று எனக்குத் தெரிந்த மாதிரி விலங்குகளின் குரலில் எல்லாம் ஒலி எழுப்பினேன். உள்ளே இருந்து சத்தம் வரவேயில்லை. இதனால் எனக்கு கோபம் அதிகரிக்கவே நான் சில கூளாம் கற்களைப் பொறுக்கி வந்து கதவின் மேல் இடுக்கினாலும் கீழ் இடுக்கினாலும் உள்ளுக்குள் எறிந்துகொண்டே இருந்தேன். இன்னமும் உள்ளிருந்து ஒரு சத்தமும் இல்லை. குறைந்த பட்சம் டேய் யார்டா அந்தக் குரங்கு என்று கூட சத்தம் வரவில்லை.

மிகுந்த ஏமாற்த்துடன் அவ்விடம் விட்டு நகர முட்பட்ட போது எனக்கு இன்னுமொரு எண்ணம் வந்தது. அதாவது மேல் மாடிக்குச் சென்று நண்பன் கழிவறையிலிருந்து வெளியில் வரும் போது அவனின் மீது கொஞ்சம் நீர் ஊற்றலாம் என்பதுதான் அது.

நினைத்ததைத் செய்து முடிக்கும் நோக்குடன் போத்தலில் நீரை நிரப்பிக் கொண்டு மாடியில் ஏறி நின்றேன். நேரம் நகர்கின்றது இன்னமும் அவன் வரவில்லை.

திடீர் என்று எனக்குப் பின்பக்கம் இருந்து ஒரு கை என் தோழில் விழவே நான் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அங்கே என் நண்பன்.

“டேய் நீதானே உள்ளுக்க போனாய்?”

“நானா? கழிவறைக்குள்ளையா? போடா விசரா, நான் கன்டீனுக்குப் போய் இரண்டு கட்லட் சாப்பிட்டிட்டு வாறன். உண்மையைச் சொன்னா நீங்களும் இழுபட்டுக்கொண்டு வருவியளே. அதுதான் வயிறு சரியில்லை என்டு சொன்னான்”

“ஆ...சரி.. சரி” சொல்லிக்கொண்டு என் கைதானே போத்தலைக் கீழே நிலத்தில் வைத்தது. இப்போது கீழே எட்டிப் பார்த்த போது கழிவறைக்குள் இருந்து எமது கணக்கு வாத்தியார் வெளியிலே வந்து கொண்டிருந்தார். பாடம் கற்கத் தயாராக நாங்கள் வகுப்பை நோக்கி ஓடினோம். (என்னுடன் இத்தனை காலம் இருந்த இரகசியம் இன்று இணையத்தில் யுனித் தமிழில் அரங்கேறிவிட்டது :))



வீர தீரப் பயணங்கள் தொடரும்......

8 மறுமொழி:

said...

இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம் இரண்டு
ஒன்று தூக்கம்
மற்றொன்று மறதி!

said...

இளமைக்கால நினைவுகள் பெரும்பாலும் எல்லோருக்கும் ஒத்துப்போகும் போல, உங்கள் அனுபவங்கள் எனக்கும் வாய்த்தது.

said...

உங்க உபாத்தியார் முகவரி இருந்தால் கொடுங்க!! என் செலவில் இதை அவருக்கு அனுப்பிவைக்கிறேன்.:-))
நல்ல அனுபவம்.

said...

சே நீங்கள் தானா அது? போன வாரம் கூட... அந்த வாத்தியார் என்னிடம் வந்து நடந்த விசயங்களைச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.

என்ன மயூரேசன்...நீங்கள் ரொம்ப நல்ல பிள்ளைன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்...ஹ...ஹ...ஹா...

said...

//இறைவன் மனிதனுக்குக் கொடுத்த வரம் இரண்டு
ஒன்று தூக்கம்
மற்றொன்று மறதி!//
ஆமாம் அதில் சந்தேகமே இல்லை திரு.சுப்பையா அவர்களே!

said...

கானாப் பிரபா..
நீங்களும் என்ன மாதிரித்தானா? பலே பலே!!!

said...

வடுவூர்குமார் ஏன் இந்த விபரீத முயற்சி... பின்பு நான் ஊருக்கே போக முடியாமல் போய் விடலாம் ;)

said...

//என்ன மயூரேசன்...நீங்கள் ரொம்ப நல்ல பிள்ளைன்னு நினைத்துக் கொண்டிருந்தேன்...ஹ...ஹ...ஹா... //
எல்லார் வாழ்க்கையிலும் கறுப்பு சரித்திரம் இருக்குமுங்கோ!!! :)