30 January 2007

59 : போக்கிரி விமர்சனம்


சென்னையில் ஸ்பென்சர் பிளாசா எவ்வளவு பிரபலமோ, கொழும்பில் அதேயளவு பிரபலம் மஜெஸ்டிக் சிட்டி. இளசுகள் முதல் பழசுகள் வந்து அலைமோதும் இடம். உள்நுழைந்தால் நாம் இருப்பது ஊத்தைக் கொழும்பு என்ற எண்ணம் பறந்து போய்விடும்.

 

தற்போது போரா முஸ்லிம்களின் சர்வதேச மாநாடு ஒன்று கொழும்பில் நடைபெறுவதால் அவர்கள்தான் மஜெஸ்டிக் சிட்டி முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.

 

நேற்றய தினம் நானும் என் நண்பனும் நேரம் போகாமல் எம்.சி (அதுதான் மஜெஸ்டிக் சிட்டி) யில் சுத்தித்திரிந்தோம். அப்போ என் நண்பன் சொன்னான்.

 

" டேய்! மஜெஸ்டிக் சினிமாவில குரு படம் ஓடுது பாப்பமா?" (இங்க ஹிந்தியில ஆங்கில சப் டைட்டல்சுடன் ஓடுது)

 

" ம்.... எக்சாம்டா... வேண்டாம்.. என்னொருநாளைக்குப் பார்ப்பம்." நான் அரைமனதுடன் மறுத்து விட்டேன்.

 

என்றாலும் மனம் கேட்காததால் சரி பார்ப்பம் என்று முடிவு செய்து படக்கட்டு வழியாக ஏறி மஜெஸ்டிக் சினிமாவை அடைந்தோம். படம் 3 மணிக்குத்தான் தொடங்க இருந்தது. இன்னும் சனம் வரவில்லை. டிக்கட் 200 ரூபா. ஸ்டில்களைப் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

" மச்சி! ஸ்டில்லப் பார்த்தா படம் நாயகன் ரேஞ்சில இருக்கும் போல இருக்குதுடா. பேசாம நல்ல அக்சன் படம் பாக்க வேற எங்கயாவது போவமா? பிறகு சி.டியில குரு படம் பார்க்கலாம் தானே? " நண்பன் வினாத் தொடுத்தான்.

 

உண்மையான நண்பன் தன் நண்பனின் வேண்டுதலை ஏற்றுக்கொள்வான் அல்லவா! ஆகவே நானும் அதற்கு உடன்பட்டேன். பின்பு நாம் கதைத்துப் பேசி முடிவானது தெஹிவளை கொன்கோட்டில் போக்கிரிப்படம் பார்ப்பது என்று.

 

விழுந்தடித்து ஓடிப்போனோம். அங்கே போக நேரமும் சரியாக இருந்தது. பல்கணி டிக்கட்டை எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக யார் கண்ணிலும் படாமல் இருந்துகொண்டோம்.

 

வழமைபோல சில விளம்பரங்களின் பின்பு திரைப்படம் ஆரம்பமானது. இரசிகர்களின் விசில் சத்தத்தினிடையே அமைதியாக நாங்கள் மட்டும் படம் பார்த்துக்கொண்டு இருந்தோம்.

 

திடீர் என்று பார்த்தால் தக்காளிப்பழம், வெங்காயம், பச்சை மிளகாய் எனப் பலவகைப்பட்ட மரக்கறிகள் காற்றிலே பறக்கின்றன. தளபதி விஜய் அதனூடே பறந்து வருகின்றார்.  

" வ்வீவீ.........ல்" தியட்டர் எங்கும் விசில் சத்தம்.

 

பின்பு வழமைபோல தனியாளாக நின்று பல ரவுடிகளை மடக்கு சம்காரம் செய்கிறார் விஜய்.இதன் பின்பு ஒரு குத்துப்பாட்டு என்று படம் சராசரியாகப் போகின்றது.

 

அவ்வப்போது அலிபாய் (பிரகாஷ் ராஜ்) ஐ பயங்கரப் பிண்ணனி மியூசிக்குடன் காட்டி பயமுறுத்துகின்றார்கள்.

அட... சீ... சாதாரண ரவுடிக் கதையா? நெஞ்சினிலே படம் போல இருக்குமோ என்று மனம் சலிப்பாக இருந்தது.

 

அசினைப் பார்த்ததும் அத்தனை வெறுப்பும் புஷ் என்று பறந்து போனது. அசின் நிசமாகவே அழகாக உள்ளார். பிசினாக ஒட்டிக்கொண்டுள்ளார் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது (யாராவது மறுத்தால் அதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.).

 

போதாத குறைக்கு வடிவேலு ஒரு பக்கம் வயிற்றைப் பதம் பார்க்கின்றார். கராட்டி மாஸ்டராக வரும் வடிவேலு அடிக்கும் லூட்டிகளை சொல்லி மாளாது. குறிப்பாக சுற்றும் விழிச் சுடரே பாடலுக்கு அசினுடன் கற்பனையில் ஆடும் காட்சி. இதைப் பார்க்கும் போதுதான் தெரிகின்றது சூர்யா எவ்வளவு மோசமாக டான்ஸ் ஆடியிருக்கின்றாரென்று.

 

படம் இப்படி அசின் வடிவேலு மூலம் சூடு பிடிக்கத் தொடங்கும் போது விஜயும் தன்பாட்டுக்கு படத்திற்கு சூடேற்ற ஆரம்பிக்கின்றார். அலிபாய் அணியில் விஜயும் முக்கிய புள்ளியாகின்றார். அவரின் போக்கிரிப் பயணம் இவ்வாறு ஆரம்பமாகின்றது.

 

இதற்கிடையே சென்னையின் புதிய காவல் துறை ஆணையாளர் நெப்போலியன் ரவுடிகளுக்கு சாட்டையடி கொடுக்கின்றார். அத்துடன் அலிபாய்யையும் கைது செய்கின்றார். அலிபாய்யை கைது செய்து நெப்போலியன் தன் இரகசிய சிறையில் அடைத்த பின்பு, அலிபாய் (பிரகாஷராஜ்) விவேக் ரேஞ்சுக்கு நகைச்சுவை செய்கின்றார். இதைக் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

 

பின்பு வழமைபோல நெப்போலியனின் மகளைக் கடத்தி அதன் மூலம் அலிபாயை அவரது கூட்டம் விடுவிக்கின்றது. அடிபட்ட புலியான அலிபாய்க்கு தன் அணியிலேயே ஒரு இரகசிய பொலீஸ் அதிகாரி இருப்பது தெரிய வருகின்றது. அது யார் என்பதை நான் சொல்லப் போவதில்லை. பின்பு அவர்கள் அந்தப் பொலீஸ் அதிகாரியையும் அவர் மகனையும் கொலை செய்கின்றனர்.

 

வன்முறைக் காட்சிகள் அதிகமாக உள்ளன. பாடல்களும் நன்றாக உள்ளன. லண்டனில் உள்ள நண்பன் சொன்னான் அங்கு 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம் என்று சென்சர் போடு அனுமதி வழங்கியுள்ளதாம்.

 

இவ்வாறு படம் விறுவிறு என்று செல்கின்றது. பிரபுதேவா மசாலாப் படம் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நாடி பிடித்துப் பார்த்திருப்பாதாகத் தெரிகின்றது. அதைவிட சண்டைக் காட்சிகள் அபாரமாக உள்ளன, கமிராவும் குறிப்பாக பாடல் மற்றும் சண்டைக் காட்சிகளில் அருமையாக காட்சிகளைச் சுட்டுத் தள்ளியுள்ளது.

 

கடைசியில் விஜய் தனியாளாக வில்லன்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதுதான் ஏன் என்று புரியவில்லை. ஏன் ஒரு பொலீஸ் அணியைக் கூட்டிக்கொண்டு சென்று ரவுடிகளை வேட்டையாடி இருக்கலாமே??.

 

இப்படி சில குறைகளைத் தவிர போக்கிரி பொழுது போக்கிற்கேற்ற ஒரு அருமையான மசாலாத் திரைப்படம்.

 

பி.கு : ஏற்கனவே பலர் விமர்சனம் எழுதி இருந்தாலும் நான் அதை வாசிக்க வில்லை காரணம் கதை தெரிந்து விடும் என்பதால் :)

 

அன்புடன்,

ஜெ.மயூரேசன்.

10 மறுமொழி:

said...

நேற்று எத்தனை மணிக்கு MC இல நிண்டீங்கள்? நானும் 2-4 அங்கதான் சுத்திகொண்டு திரிஞ்சனான். கண்டிருப்பியளோ தெரியாது..
அந்த முஸ்லிம்களின் விடயம் நாங்களும் குறிப்பாக அவதானித்த ஒன்று. MC Food court முழுவதும் அவர்களால்தான் நிறைந்திருந்தது. ஏறத்தாள 40000 முஸ்லிம்கள் இங்க அழைத்துவரப்பட்டிருப்பதாக அவர்களில் ஒருவரை விசாரித்தபோது தெரிந்தது. எங்க திரும்பினாலும் தொப்பியள்தான், அரபு மொழியில் கதைச்சுக்கொண்டு அங்கயும் இங்கயும் திரிஞ்சு கொண்டிருந்தார்கள்.

வடிவேலுவின் நகைச்சுவைகளில் சுட்டும் விழிச்சுடரே பாடலுக்கான நடனத்தைத்தவிர வேறு எதிலும் சிரிப்பு வரவில்லை எனக்கு, மற்றைய காட்சிகளில் சிரிக்க வைக்க ஏதேதோ செய்கிறார் ஆனால் பார்க்கிற எங்களுக்குத்தான் அசௌகரியம் ஏற்படுகிறது.
படம் முழுவதும் ஒரே ரத்தமும் கொலைகளும்தான், அவற்றையெல்லாம் விசிலடித்து ரசிப்பதென்றால் இங்குள்ள மனிதர்களின் மனநிலை குரூரமாக மாறிவருகிறதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது,
உதாரணமாக அசின் பார்த்துக் கொண்டு நிற்க விஜய் கிட்டத்தட்ட 20 பேரை ஒரேயடியாக போட்டுத்தள்ளுவது, பார்க்கவே ஏதோ செய்கிறது எனக்கு. அதிலும் விஜய் ஓடி ஓடி கொலை செய்ய அசின் ஏன் தேவை இல்லாமல் பின்னாலே ஓடிக்கொண்டேயிருக்கிறார் என்பதுவும் புரியவேயில்லை.

ஆனாலும் அசினுடைய ரசிகன் என்றபடியால் இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு பார்த்து முடித்தேன்.;-))

said...

அபத்தக் களஞ்சியமாய் ஒருபடம் என்றால் அது போக்கிரிதான். ஷேவ் பண்ணாத முக்த்துடன் ஒரு போலீஸ் அதிகாரி அதுவும் I.P.S ரேஞ்சில் பார்த்தாலே எரிச்சல் பற்றிக்கொண்டு வருகிறது. மொத்தத்தில் ஒரு திராபையான் படம், ஆனாலும் அதுதா ஹிட். தலவிதிய நோவதைத் தவிர வேறு ஏதும் செய்வதற்கில்லை

said...

அண்ணே இது உங்க சொந்த ஆக்கமா??

இங்கே கனடாவில் ஒரு பத்திரிகையில் வந்து இருக்கு அதான் கேட்டேன்!!

உங்க பேர் போட்டு இருக்காங்கள்!!

said...

//நேற்று எத்தனை மணிக்கு MC இல நிண்டீங்கள்?//
1-2:30 வரை நின்றிருப்பேன்

//MC Food court முழுவதும் அவர்களால்தான் நிறைந்திருந்தது.//
நாங்கள் கஷ்டப்பட்டு பிடித்த இடத்தில கொஞ்சம் கூட சூடு சுறனை இல்லாமல் வந்து குந்திவிட்டனர்.. என்ன செய்வது நாட்டின் விருந்தாளிகள் என்று விட்டுவிட்டோம்.

//அரபு மொழியில் கதைச்சுக்கொண்டு அங்கயும் இங்கயும் திரிஞ்சு கொண்டிருந்தார்கள்//
இவர்கள் பேசுவது அரபு இல்லை. ஒரு வகை குஜராத்தியின் பேச்சுவழக்காம்.

//அரபு மொழியில் கதைச்சுக்கொண்டு அங்கயும் இங்கயும் திரிஞ்சு கொண்டிருந்தார்கள்//
எனக்கு வந்திச்சே!

//ஆனாலும் அசினுடைய ரசிகன் என்றபடியால் இவ்வளவையும் பொறுத்துக்கொண்டு பார்த்து முடித்தேன்.;-)) //
அடேங்கப்பா என்ன மாதிரி ஒருவர்தான்!

said...

அன்பின் பிரசாந்த் விஜய் படம் என்று தெரிந்து போய்விட்டு விக்ரம் பட ரேஞ்சுக்கு எதிர்பார்க்கலாமா?

said...

//அண்ணே இது உங்க சொந்த ஆக்கமா??

இங்கே கனடாவில் ஒரு பத்திரிகையில் வந்து இருக்கு அதான் கேட்டேன்!!

உங்க பேர் போட்டு இருக்காங்கள்!!//
கனடாவில் இருக்கும் எனது நலன் விரும்பியான திரு முரளீதரன் அவர்கள் அனுப்பியுள்ளார் என்று நினைக்கின்றேன். அவருக்கு நன்றிகள். அவர் மூலம் எனது கதையொன்னும் கனடாப் பத்திரிகையில் பிரசுரமானது!! :)

said...

//இவர்கள் பேசுவது அரபு இல்லை. ஒரு வகை குஜராத்தியின் பேச்சுவழக்காம்.//
தகவலுக்கு நன்றி

//எனக்கு வந்திச்சே!//
என்னண்ணை?


இங்கை இப்பிடி வலை பதியிற ஆக்கள் பெரிசா இருக்கிற மாதிரித் தெரியேல்லையே..
உங்களுக்கு தெரிஞ்சா அறிமுகப்படுத்தி வையுங்கோவன்..!

நாங்களும் ஒரு வலைப்பதிவர் சந்திப்பு நடத்துவம்?
பிறகு அதைப்பற்றி பதிவும் போட்டு அறுப்பம்,
ஏன் விடுவான்?? ;-))

said...

film nothing,but dance movements fantastic!

said...

//உங்களுக்கு தெரிஞ்சா அறிமுகப்படுத்தி வையுங்கோவன்..//
கொட்டாஞ்சேனையில் நான் அறிய மு.மயூரன் இருக்கிறார். அவர் தளத்தைப் பாருங்கள்!
Mayuran's Blog

said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி பிரியா!